பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு மின் வாரியத்திலிருந்து அனுப்புவது போன்று போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் அந்த குறுஞ்செய்திகளை நம்பி, மக்கள் அதில் உள்ள லிங்கில் சென்று பார்க்கும் போது அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் பணத்தைத் திருடி விடுகின்றனர். எனவே இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் மக்கள் பதட்டம் அடைய வேண்டாம், அந்த எண்ணை தொடர்புகொள்ளவோ அதில் உள்ள லிங்கை கிளிக் செய்வதோ செய்ய வேண்டாம். உனடியாக 1930 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து புகார் அளிக்கவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் கட்டணம் செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மின்வாரியம் வெளியிட்டுள்ள குறிப்புகளில், ‘குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும், அது நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும். செய்தியில் எழுத்துப் பிழைகள் இருக்கும். சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:/ மற்றும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்.

தொடர்புக்கொள்பவர் வேற்றுமொழி உச்சரிப்புடன் பேசுவார், சிறிய தொகையான ரூ.10 மட்டும் செலுத்தினால் போதும் எனப் பேசுவார்கள் அதை நம்ப வேண்டாம். உடனே எச்சரிக்கையாகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பைத் துண்டிக்கவும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com
