ரஷ்யா அனுப்பிய லூனா – 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா – 25 விண்கலத்தை கடந்த மாதம் 10ஆம் தேதி ரஷ்யா விண்ணில் செலுத்தியது. இது நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டிருந்தது. கடந்த 17ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் ரஷ்ய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.
ஆனால், திட்டமிட்டபடி நிலவில் லூனா – 25 விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. இதனால், நிலவின் சுற்றுப்பாதையிலேயே லூனா – 25 விண்கலம் சுற்றி வந்தது.
இதற்கிடையே, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 19ஆம் தேதி ரஷ்ய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், லூனா – 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்தது. இந்த விண்கலம் விழுந்த இடத்தை, நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com