ஜம்முவிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நவம்பர் 22-ம் தேதி கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில், இரண்டு ராணுவ கேப்டன்கள் உட்பட நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, பஜிமால் என்ற பகுதியில் நவம்பர் 23-ம் தேதி ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த குவாரி என்ற பயங்கரவாதி உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறுகிறது. அந்த பயங்கரவாதி ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பயிற்சி பெற்றவர் என்றும் ராணுவத்தினர் கூறுகிறார்கள்.


அதேபோல, குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த சில மாதங்களில், பயங்கரவாதிகளுடனான மோதல்களில் ராணுவ உயர் அதிகாரிகளும் உயிரிழந்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், இரு ராணுவ உயர் அதிகாரிகளும், போலீஸ் டி.எஸ்.பி ஒருவரும் கொல்லப்பட்டனர்.
நன்றி
Publisher: www.vikatan.com