சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் கடந்த 29-ம் தேதியன்று, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலிருந்து சேலம் வந்த விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை பயணித்து வந்தார். சேலம் வருகைபுரிந்த ஆளுநருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் பூங்கொத்து வழங்கி, விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை கர்நாடக மாநிலத்துக்கு செல்லவிருந்ததால், சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்திருக்கும் விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்திவிட்டு, மாலை கிளம்புவதாக இருந்தார். கோவா ஆளுநரின் சேலம் வருகை என்பது, முன்கூட்டியே அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரிந்த ஒன்றாக இருந்து வந்தது.
ஆனால், சேலம் வருகைபுரிந்த ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு அரசின் மூலம் வழங்கப்படும் அங்கீகாரம் என்பது வழங்கப்படமால் போய்விட்டதாக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை கிளம்பியது. காரணம், ஆளுநர் விமான நிலையத்திலிருந்து பயணித்து சென்ற வாகனத்தில் தேசியக்கொடி இல்லாமல் இருந்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
