தெலங்கானா: பிஆர்எஸ் கட்சியின் `தாராள’ வாக்குறுதிகள்! –

தெலங்கானா சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்), காங்கிரஸ், பா.ஜ.க என மூன்று கட்சிகள் களத்தில் இருந்தாலும், பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. சமீபத்தில், தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, அதிரடியாக சில தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.

சோனியா காந்தி

பெருமளவில் மக்கள்கூடிய அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தெலங்கானா மக்களுக்கு ஆறு உத்தரவாதங்களை அளிப்பதாகவும், ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டார்.

‘தெலங்கானாவில் மகளிர் நலனுக்காக மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.2,500 நிதி உதவியாக வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும். தெலங்கானா முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் மகளிருக்கு இலவசப் பயணத் திட்டம் கொண்டுவரப்படும்’ என்றார் சோனியா காந்தி. காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கும் ஆறு வாக்குறுதிகள் தெலங்கானா மக்களிடையே பேசுபொருளாகியிருக்கின்றன.

ராகுல் காந்தி

மேலும், ‘தெலங்கானாவுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் காப்பாற்றியது. அதைப்போல, தெலங்கானா மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்’ என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

இந்த நிலையில், ‘காங்கிரஸின் வாக்குறுதிகள் நகைப்பிற்குரியவை. அவை, யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் இருக்கின்றன’ என்று பா.ஜ.க விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான என்.வி.சுபாஷ், “காங்கிரஸின் ஆறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதிகமான நிதி தேவைப்படும். எனவே, அந்த ஆறு உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கான நிதி குறித்து காங்கிரஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற மிகபெரிய வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்பாக, இந்தத் திட்டங்களுக்கு எப்படி நிதி வழங்குவார்கள் என்பதை முதலில் மக்களிடம் காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

பிரதமர் மோடி

இந்தச் சூழலில், ஏராளமான வாக்குறுதிகளை ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி வாரிவழங்கியிருக்கிறது. பி.ஆர்.எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்டோபர் 15-ம் தேதி பி.ஆர்.எஸ் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் வெளியிட்டார். அப்போது, பி.ஆர்.எஸ் கட்சியின் 51 வேட்பாளர்களுக்கு B-Forms வழங்கியதுடன், தேர்தல் செலவுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.40 லட்சத்துக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார். முதியோர் ஓய்வூதியத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆகியவை உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியையும் அவர் வழங்கினார்.

ஆனால், ‘முதியோர் உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.6,000 ஆக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதிதான் எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. மாநிலத்தின் பட்ஜெட்டில் பெரும் பகுதி இத்தகைய உதவித்தொகை திட்டங்களுக்குப் போய்விட்டால், பிற திட்டங்களை அரசால் எப்படி செயல்படுத்த முடியும் என்ற கேள்வியை அங்கிருக்கும் அரசியல் நோக்கர்கள் எழுப்புகிறார்கள்.

அந்த அறிக்கையில், ‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் உயிர் காப்பீடு, தெலங்கானா அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தில் தரமான அரிசி விநியோகிக்கப்படும், சௌபாக்யா லெட்சுமி திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்ற வாக்குறுதிகள் வழங்கப்படிருக்கின்றன.

சந்திரசேகர ராவ்

இந்த உதவித்தொகைகள் படிப்படியாக உயர்த்தப்படும் என்று சந்திரசேகர ராவ் கூறுகிறார். ஆனாலும், அது சாத்தியமா என்ற கேள்விக்கும், அதற்கான நிதியாதாரம் பற்றிய கேள்விக்கும் பி.ஆர்.எஸ் தரப்பினர் விளக்கம் எதுவும் தரவில்லை. இடஒதுக்கீட்டில் பொதுப்பிரிவினராக இருக்கும் முற்பட்ட வகுப்பினரை வாக்குகளைக் கவரும் வகையில் பி.ஆர்.எஸ் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளில் ஒன்று, 119 தொகுதிகளிலும் உண்டுஉறைவிடப் பள்ளிகள் திறக்கப்படும் என்பது.

அதேபோல, அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவரும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் அறிவித்திருக்கிறார். இரண்டு முறை வெற்றிபெற்று பத்தாண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த பி.ஆர்.எஸ் கட்சிக்கு, இந்த முறை வெற்றிபெறுவது எந்தளவுக்கு சவால் நிறைந்தது என்பது அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலிருந்தே தெரிகிறது. வாக்குறுதிகளில் பெரும்பாலானவை, நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவானவையே என்பது தான் உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *