சென்னை கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில், கீழ்பாக்கம் தோட்டம் (kilpauk garden) பேருந்து நிறுத்தத்தில், இரண்டு நிழற்குடைகள் அமைந்திருக்கின்றன. அந்த இரண்டு நிழற்குடைகளில், ஒரு நிழற்குடைக்குப் பின்னாலே, நெருக்கமாக டாஸ்மாக் மதுக்கடை அமைந்திருக்கிறது. இதனால், முக்கியமான அந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதை கண்கூடாகவே காண முடிகிறது. இது குறித்து நமக்கு தெரிய வரவும், நம்முடைய விகடன் டீம் அங்கு ஸ்பாட் விசிட் செய்தது.

கீழ்பாக்கம் தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு நிழற்குடைகளில் ஒரு நிழற்குடைக்கு, தொட்டு பின்னால், மதுக்கடை அமைந்திருக்கிறது. முதலில் கடை திறக்கும் நேரமான பகல் 12 மணியளவில் அப்பகுதிக்கு விசிட் அடித்தோம். அந்நேரம் பேருந்து நிறுத்தத்தில் பெரிதாகக் கூட்டமில்லாமல் காணப்பட்டது. ஒரு நிழற்குடையின் கீழ் தான் பயணிகள் அனைவரும் நெருக்கமாக நின்றிருந்தனர். ஆனால் மற்றொரு நிழற்குடை மதுக்கடைக்கு முன்னாலே இருப்பதனால், பேருந்து நிறுத்ததை சுற்றி நாற்றமும், மது பாட்டில் மூடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்கள், வாந்தி என்று மிகவும் அசுத்தமாகவும், காட்சி அளித்தது. மேலும் அந்த நிழற்குடை என்பது முழுக்க முழுக்க மதுக்கடைக்கு என்று எழுதி வைத்ததுபோல காட்சியளித்தது.
அக்கம் பக்கத்தில் இதைப் பற்றிக் கேட்டபோது, “பல வருடங்களாக இந்த மதுக்கடை இருக்கிறது, சிரமமாகத்தான் இருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும். பேருந்து நிறுத்தத்திற்கு இவ்வளவு அருகில் மதுக்கடையை வைத்திருக்க வேண்டாம் தான். ஆனால், நாங்க சொல்லி மதுக்கடையை மூடவா போறாங்க?” என்று வேதனை தெரிவித்தார்கள்.
தொடர்ந்து நாம் நோட்டம் விட்ட போது, பகல் 2 மணி அளிவில், மது அருந்திவிட்டு ஒருவர் மக்கள் நிற்கும் பகுதியில் அமர்ந்து பீடி பிடித்துக்கொண்டு இருந்தார். அது அங்கே இருந்தவர்களுக்கு அசௌகரியமாக இருந்ததை நம்மால் காண முடிந்தது. அந்த ஒரு நபர் மட்டுமில்லாமல் பலரும் அங்கே சாதாரணமாக புகைபிடிப்பதை நம்மால் பார்க்க முடிந்தது. போதையில் இருப்பவரிடம் சென்று நாம் என்ன கேட்பது என்ற அச்சம் மக்களின் முகங்களில் காணப்பட்டது.

பேருந்து நிறுத்தத்திலிருந்தவர்களிடம் பேசியபோது ஒருவர், “நான் இந்த நிறுத்தத்தை பயன்படுத்துவது இது தான் முதல்முறை. புதுசா வர எனக்கே முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது என்றால் இந்த பேருந்து நிறுத்தத்தைத் தினமும் பயன்படுத்துபவர்கள் இதை எல்லாம் சகித்துக்கொண்டு தான் போகவேண்டுமா? நான் மட்டும் இந்த நிறுத்ததை பயன்படுத்தப் போவதில்லை. பெண்கள், குழந்தைகள் என இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் கவனத்தில் கொண்டு மதுக்கடை அமைத்திருக்க வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும், மாலை 6 மணி அளவில் மீண்டும் சென்று பார்வையிட்டோம். அப்போது, பேருந்து நிறுத்தத்திலும் , மதுக்கடையிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மதுக்கடையில் மதுவை வாங்குவபர்கள், அங்கேயே அதனை திறந்து குடிப்பதை காண முடிந்தது. பேருந்து நிறுத்ததில் இருந்த பள்ளி குழந்தைகள் கண் முன்னே அப்பாடியான சம்பவங்கள் நடப்பது வேதனை தருவதாக இருந்தது. மேலும், மதுக்கடைக்கு முன்னால் இருந்த நிழற்குடையில் ஒருவர் பின் ஒருவராக குடித்துவிட்டு வந்தவர்கள் அமரத் தொடங்கினார்கள். 4, 5 நபர்கள் அங்கேயே இருந்து அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் சிலர் அந்த மதுக்கடையிலிருந்து குடித்து முடித்து, போதையில் அலங்கோல நிலையில் மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்ததில் வந்து உறங்கிவிட்டனர். அங்கே பேருந்திற்காகக் காத்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அது மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தியது.

மேலும், மக்கள் பயன்படுத்துகிற நிழற்குடையின் அமரும் இருக்கை சற்று உயரமாக இருந்தது. அதில் உயரம் குறைந்தவர்களால் அமர முடியவில்லை. அதே நேரத்தில் மற்றொரு நிழற்குடையை பயன்படுத்தவும் முடியவில்லை. காரணம் அது மதுபோதை ஆசாமிகளால் நிரம்பி இருந்தது. இந்த குறிப்பிட்ட இரு நிழற்குடைகளுக்கு நடுவில் தான் இந்த டாஸ்மாக் கடையின் பாருக்கான ஒளிரும் பலகையும் இருக்கிறது.
இப்படி இந்த ஒற்றை கடையால், ஆயிரக்கணக்கான மக்கள் படும் இன்னல்கள் ஏராளம். இந்த ஒரு கடையை மாற்றி அமைப்பதன் மூலம், பயணிகளின் இன்னல்கள் குறையும், குழந்தைகள் போதை ஆசாமிகளிடம் இருந்து விலகி நிம்மதியாக சென்று வர முடியும், சுகாதாரமும் கிடைக்கும்.! நடவடிக்கை எடுக்குமா அரசு?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com