ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு வரும் அக்டோபர் 30ஆம் தேதி குருபூஜை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற இருப்பதால், எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com