தமிழகத்தில் எம்.பி தொகுதிகளைக் குறைக்கத் திட்டமா? –

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்று மோடி அரசு முடிவுசெய்திருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. அதை உறுதிசெய்யும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தொகுதி மறுவரையறை செய்வதற்கான திட்டமும் மத்திய அரசிடம் இருக்கிறது.

மோடி

நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறிவிட்டது. அப்படியென்றால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக இந்தியா முழுவதும் தொகுதி மறுவரையறைப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருப்பது தெளிவாகியிருக்கிறது.

சிக்கல் என்னவென்றால், மக்களவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான். எனவே, மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவு தென் மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்டாலின்

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப்போகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கொந்தளித்திருக்கிறார். தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது பேசிய ஸ்டாலின்,  ‘தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்க முயல்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சதியை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி-க்கள் செல்கிறார்கள் என்றால், நமது உரிமைகளை எடுத்துச் சொல்லவும், உரிமைகளை நிலைநாட்டவுமே செல்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது’ என்றார் ஸ்டாலின்.

நாடாளுமன்றம்

ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டையும் பா.ஜ.க அரசு முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு என்று சொல்வதே இதை நிறைவேற்றாமல் இருக்கும் தந்திரம்தான். குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது, பா.ஜ.க-வின் உயர் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது’ என்றார் ஸ்டாலின்.

அதாவது, 2026-ம் ஆண்டுக்குப் பிறகு, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படவிருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். உத்தரப்பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்த வகையில், உத்தரப்பிரதேசத்துக்கு 11 மக்களவைத் தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். தமிழகத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகள் வரை குறைந்து மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 31 ஆக மாறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆகக் குறையலாம் என்று சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றம் – மோடி

கேரளாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 20-லிருந்து 12-ஆகக் குறையலாம் என்றும், கர்நாடகாவில் மக்களவைத் தொகுதிகள் 28-லிருந்து 26-ஆகக் குறையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், உ.பி-க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு ஆறு தொகுதிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு நான்கு தொகுதிகளும், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும், தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும் வலுவான குரல்கள் தென் மாநிலங்களிலிருந்து எழுந்திருக்கின்றன. அந்த வகையில், தொகுதிகள் குறைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வலுவாகக் குரல் எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *