ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: ‘கவனத்துக்குரிய’ அரசின் கேள்விகள்!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு மாநில அரசு அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றம் மூலம் அனுமதியைப் பெற்றிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. கடந்த 2022-ம் ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. 

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

எனவே, இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை பலர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘காவல்துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறையின் அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாங்குனேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம். இந்த ஆறு இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய மூன்று இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தலாம்’ என்று உத்தரவிட்டது.

அதேபோல, இந்த ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவில்லை. அக்டோபர் 22, 29 ஆகிய இரண்டு தினங்கள் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழ்நாடு அரசின் தரப்பில் அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

சென்னை உயர் நீதிமன்றம்

காவல்துறை தரப்பி்ல் உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவில் போதிய விவரங்கள் இல்லை. அக்டோபர் 30-ம் தேதி தென்மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவிருக்கிறது. அதற்காக, தமிழ்நாடு முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், மசூதிகள், தேவாலயங்கள், திராவிடர் கழக அலுவலகம் ஆகியவை அமைந்திருக்கும் பகுதிகளில் ஊர்வலம் செல்ல மனுதாரர்கள் அனுமதி கோரியிருக்கிறார்கள். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்து அகண்ட பாரதத்தை கட்டமைப்போம் என்ற வரைபடங்களையும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் வெளியிட்டிருக்கிறார்கள்’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‘அகண்ட பாரதம் என அவர்கள் கூறுவதால் தமிழ்நாடு அரசுக்கு என்ன பிரச்னை’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, ‘இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கும்போது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். இந்த ஊர்வலத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. அதனால்தான், அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து பல்வேறு கேள்விகள் தமிழ்நாடு அரசின் தரப்பில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டன. குறிப்பாக, ‘ஆர்.எஸ்.எஸ். என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பா… எந்த சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது… ஆர்.எஸ்.எஸ் ஓர் அரசியல் கட்சியென்றால், தேர்தல் ஆணையத்தால் அது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா… ஆர்.எஸ்.எஸ் பேரணி, ஊர்வலத்தில் யார் யார் பங்கேற்பர்கள்… மொத்தம் எத்தனை பேர் அதில் பங்கேற்கக் கூடும்…’ என்ற கேள்விகள் எழுப்பட்டன. மேலும், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்கிற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மாநில அரசின் தரப்பில் சுட்டிக் காண்பிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டபோது, ‘அகண்ட பாரதம் என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கை. அதில் யாரும் தலையிட முடியாது. ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் சார்பில் அணிவகுப்பு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் போலீஸார் எதையாவது காரணம் கூறி தடுக்கிறார்கள்’ என்றனர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்றம், ‘மனுதாரர்கள் கோரியிருக்கும் அக்டோபர் 22, 29 ஆகிய தேதிகளில் 33 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. மேலும், ‘போலீஸாரின் நிபந்தனைகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். தகுந்த பாதுகாப்பை போலீஸார் வழங்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ்

இந்த வழக்கில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தமிழ்நாடு அரசின் தரப்பின் கேட்கப்பட்ட கேள்விகளை நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனித்திருக்கிறது. ஆகையால்தான், ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் போல மற்ற அமைப்புகளிடமும் கேட்கப்பட்டிருக்கிறதா?’ என்ற கேள்வியை உயர் நீதிமன்றம் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *