Tamil News Live Today: Operation Ajay; 4-வது சிறப்பு விமானம்

Tamil News Live Today: Operation Ajay – 4-வது சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 274 இந்தியர்கள் மீட்பு!

போர் மேகங்கள் முகாமிட்டிருக்கும் இஸ்ரேலில், தொடர் தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஹமாஸ் குழுவினர், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என மனிதாபிமானமின்றி அனைவர்மீதும் கொடூர தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் எதிர் தாக்குதலிலும் காஸாவில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கின்றன. தங்களுடைய மக்களை பணயக்கைதிகளாக அழைத்துச் சென்றிருக்கும் ஹமாஸ் குழுவினர், அவர்களை பத்திரமாக ஒப்படைக்கும்வரை, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் விநியோகம் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறிவிட்டு, நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த பதற்றமான சூழலில், இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்துவருவதென மத்திய அரசு முடிவு செய்து, `ஆபரேஷன் அஜய்” என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கான முயற்சிகளில் இறங்கியது. அதன்படி, இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து கடந்த 13-ம் தேதி, முதலாவது மீட்பு விமானம் மூலம் முதற்கட்டமாக இஸ்ரேலிலிருந்து 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

அதில் வந்த இந்தியர்களை, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். ஆபரேஷன் அஜய்யின் பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நான்காவது மீட்பு விமானம் மூலமாக 274 இந்தியர்கள் இஸ்ரேலிலிருந்து தற்போது மீட்கப்பட்டிருக்கின்றனர். ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இதுவரை, 918 இந்தியர்கள் இஸ்ரேலிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *