ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்து கிண்டி போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் ரெளடி கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே என்ஐஏ அமைப்பு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் கிண்டியில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, பணியில் இருந்த காவலர் ஒருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அன்று என்ன நடந்தது என காவலரிடம் வாக்குமூலம் பெற என்.ஐ.ஏ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதனிடையே, ரெளடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com