`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!’ – சென்னை உயர் நீதிமன்றம்
கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி நிலங்களாக அரசு அறிவித்தது. இந்த நிலையில், பட்டா வழங்கக் கோரி அவரின் வாரிசுகள் சிவராஜ், பாலாஜி ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அறிக்கை சமர்ப்பித்த தமிழக அரசு, `நிலம் மீட்கப்பட்டது. நேரில் சென்று மீண்டும் ஆய்வு செய்தபோது, அ.தி.மு.க எம்.எல்.ஏ, பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஆகியோர் பல கட்டுமானங்களை ஏற்படுத்தியிருந்தனர்” எனத் தெரிவித்திருந்தது.


அதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “நில உரிமை மாற்றம் அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது. பொது ஊழியர் என்கிற பெயரில் அரசு சொத்தை அபகரிக்க அனுமதிக்க முடியாது. நிலத்தையும், கட்டடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக குடியிருப்போரை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி, நவம்பர் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com