சென்னையில் நாளை தொடங்குகிறது ‘உலக முதலீட்டாளர் மாநாடு’!
சென்னை வர்த்தக மையத்தில், ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ நாளை தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடங்கவுள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்கள் மற்றும் One Trillion Dreams (ஒரு ட்ரில்லியன் கனவுகள்) ஆகிய பரப்புரைகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. 450-க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள், 170 பேச்சாளர்கள், 50 உலக நாடுகளின் பங்கேற்பு என உலக முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தின் தொழில் திறத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும்.

தலைமைப் பண்பு குறித்த 26 அமர்வுகள், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான காட்சியரங்குகள், தமிழகத்தின் தொழிற் சூழலுக்கான காட்சியரங்குகள், பல்வேறு உலக நாடுகளுக்கான காட்சியரங்குகள், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு காட்சியரங்குகள் என எங்கள் மாநிலத்தின் விந்தையைக் காணவும், தொழில் கூட்டிணைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அற்புதமான வாய்ப்பினை இம்மாநாடு வழங்கும். தமிழகத்தின் தொழில் மரபைக் கொண்டாடி இம்மாநிலம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள எங்களோடு இணையுங்கள்” என தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
