கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. களமச்சேரி பகுதியில் 2000 பேர் கலந்துகொண்ட ஜெப கூட்டம் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிலையில் காலை 9.45 மணிக்கு மூன்று முறை குண்டு வெடிப்பு நடந்துள்ளது. குண்டு வெடிப்பை அடுத்து, இடம் முழுவதும் தீ பற்றி எறிந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு காரணமாக பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகளும் விசாரணையை துவங்கியுள்ளனர்.
வெடிகுண்டு வைத்ததாகக் கூறி கொச்சியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் தாமாக வந்து சரணடைந்தார். கொடகரா போலீசார் அந்த நபரை கொச்சியில் இருந்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் விரிவான விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீசில் சரணடைந்த கொச்சியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் தான் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று கேரளா காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் நடந்த விசரணைக்கு பிறகு காவல்துறை இதை உறுதி செய்துள்ளது.
போலீசில் சரணடைவதற்கு முன் மார்ட்டின், குண்டுவைத்தது நான் தான் என்று விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மார்டினும் அதே கிறிஸ்துவ சபை சேர்ந்தவர் என்றும், டிபன் பாக்ஸில் குண்டுகளை மறைத்து வைத்து வெடிக்க செய்ததாகவும், அந்த விடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் டோமினிக் மார்ட்டினின் பின்னணி தொடர்பாக கேரளா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் கண்ணூர் ரயில் நிலையத்தில் குஜராத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரித்த போது அவர் அளித்த பதிலால் சந்தேகமடைந்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கேரளா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com