`திமுக-வின் கல்வி அரசியலை மாணவர்கள் ஏற்க மாட்டார்கள்!'

திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விகுறியாகவே இருக்கிறது. தொடர்ந்து பல இடங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, போதைப்பொருள், பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதையெல்லாம் காவல்துறையால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை. காவல்துறைக்கு ஏன் இந்த சுதந்திரத்தைக் கொடுக்கவில்லை… காவல்துறையை இந்த அரசு சுதந்திரமாகச் செயல்படவிட வேண்டும். அண்டை நாடுகளிலிருந்து மீனவர்களை அச்சுறுத்துவதும், தாக்கும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பு

மாலத்தீவாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் மீனவர்கள் அச்சமின்றி, கடலுக்குச் செல்லக்கூடிய நிலையை மத்திய அரசு அண்டை நாடுகளோடு கலந்து பேசி, ஏற்படுத்த வேண்டும். அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இந்தியாவிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, தேர்தல் வாக்குறுதியை இரண்டரை ஆண்டுகள் கழித்தும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால், அது தி.மு.க அரசுதான். மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்குகள், தற்போதைய தி.மு.க அரசுக்கு எதிர்மறை வாக்குகளாக மாறும் என்பதில், மாற்றுக்கருத்து கிடையாது.

நீட் தேர்வைப் பொறுத்தவரையில், நீட் தேர்வு வேண்டாம் என்றால் அகில இந்திய அளவிலோ, மக்கள் மன்றத்திலோ பெரும்பாலான உறுப்பினர்களை வைத்திருக்கும் உங்கள் ஆட்சியில் முடிவை எடுக்க வேண்டும். அல்லது, நீதிமன்றத்துக்குச் சென்று நீதிமன்றத்தின் மூலம் முழுமையான தீர்ப்பைப் பெற வேண்டும். இரண்டும் இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி, மாணவர்களுடைய மனநிலையைக் குழப்பி பெற்றோர்களுடைய எதிர்பார்ப்பை மாற்றக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்துவது தவறு. கல்வியிலே அரசியலை ஒருபோதும் புகுத்தக் கூடாது.

ஜி.கே.வாசன்

அதை தி.மு.க தொடர்ந்து செய்துகொண்டிருப்பது, தவறான ஒன்று. நீட் தேர்வு அகில இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களுக்குச் சவால்விடும் வகையில் செயல்பட்டு படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அன்றைய அ.தி.மு.க ஆட்சியில் அதற்குண்டான சதவிகிதத்தை விசேஷமாக ஏற்படுத்தி ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு மாணவர்களிடையே கையெழுத்து இயக்கம் எனக் கூறிக்கொண்டு, மாணவர்களைக் குழப்புவது தேவையற்ற ஒன்று. மாணவர்களும் பெற்றோர்களும் தி.மு.க செய்கின்ற இந்தக் கல்வி அரசியலை ஏற்கமாட்டார்கள்” என்றார்.  

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *