NewsClick: "விமர்சனங்களை தேசவிரோத பிரசாரமாகக்

நியூஸ்க்ளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று, செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது. 2018 முதல் 2021 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களிடமிருந்து நியூஸ்க்ளிக் நிறுவனத்துக்கு ரூ.86 கோடி நிதியுதவி வந்திருப்பதாகவும், நியூஸ்க்ளிக் நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்களை ஆய்வு செய்கையில், சீன ஆதரவாளர் நெவில் சிங்கத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.

அமலாக்கத்துறை சோதனை

இதை மறுத்த நியூஸ்க்ளிக்கின் ஆசிரியர் பிரபீர் புரகாயஸ்தா, “மத்திய அரசின் இந்த நடவடிக்கை செய்தி இணையதளத்துக்கு எதிரான ஒடுக்குமுறை. பல்வேறு ஏஜென்சிகளின் இந்த விசாரணைகள், எங்கள் நிறுவனம்மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள், நியூஸ்க்ளிக் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கும் முயற்சி. இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் நடவடிக்கை” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், நியூஸ்க்ளிக் ஊடகவியலாளர்கள் வீட்டில் கடந்த 3-ம் தேதி காலை, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள், அதன் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா (76), நிறுவன நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோரைக் கைதுசெய்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்குப் பத்திரிகையாளர்கள் சங்கம், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நியூஸ்க்ளிக் ஊடகவியலாளர்களிடம் சோதனை

இதற்கிடையில், நியூஸ்க்ளிக் நிறுவனம் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “நியூஸ்க்ளிக் அலுவலகங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகள், கடந்தகால மற்றும் தற்போதைய ஆலோசகர்கள், நியூஸ்க்ளிக் உடன் தொடர்புடைய தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் உட்பட பலருக்குத் தொடரனுடைய இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது. பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, எங்கள் நிறுவனர், ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, எங்கள் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்வளவு நடந்தும் இன்னும் எங்களுக்கு எஃப்.ஐ.ஆர் நகல் வழங்கப்படவில்லை. எங்கள்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களின் சரியான விவரங்கள் குறித்தும் தெரிவிக்கவில்லை. பறிமுதல் குறிப்புகள், கைப்பற்றப்பட்ட தரவுகளின் குறிப்புகள் அல்லது தரவின் நகல்கள் போன்ற எந்தவொரு முறையான செயல்முறையையும் பின்பற்றாமல், எங்கள் நிறுவன வளாகம் மற்றும் ஊழியர்களின் வீடுகளிலிருந்து மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்வதைத் தடுக்க, எங்கள் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

மோடி – அமித் ஷா

இப்போதுவரை எங்களுக்கு தெரிந்தவை, ‘சீனா குறித்த பிரசாரத்தை இணையதளத்தில் பகிர்ந்து கொண்டுசென்ற குற்றச்சாட்டில் நியூஸ்க்ளிக் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது’ என்பது மட்டுமே. பத்திரிகை சுதந்திரத்தை மதிக்க மறுக்கும், அரசின்மீதான விமர்சனங்களை தேசதுரோகம், தேச விரோத பிரசாரமாக கருதும் அரசின் இந்த நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டிக்கிறோம். 2021-ம் ஆண்டு முதல் இந்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகளின் தொடர் நடவடிக்கைகளுக்கு நியூஸ்க்ளிக் இலக்காகியிருக்கிறது.

அதன் அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகள் அமலாக்க இயக்குநரகம், டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றால் சோதனையிடப்பட்டிருக்கிறது. எங்களின் மடிக்கணினிகள், கேஜெட்டுகள், தொலைபேசிகள் போன்றவை கடந்த காலங்களிலும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அனைத்து மின்னஞ்சல்களும், தகவல்தொடர்புகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கின்றன. அனைத்து வங்கி அறிக்கைகள், விலைப்பட்டியல்கள், செலவுகள் மற்றும் நியூஸ்க்ளிக் மூலம் கடந்த பல ஆண்டுகளில் பெறப்பட்ட நிதி ஆதாரங்கள் ஆகியவை அவ்வப்போது அரசின் பல்வேறு நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

நியூஸ்க்ளிக்

பல்வேறு இயக்குநர்கள் மற்றும் பிற தொடர்புடைய நபர்கள் இந்த அரசின் நிறுவனங்களால் விசாரிக்கப்படுவதற்கு பல சந்தர்ப்பங்களில் எண்ணற்ற மணிநேரங்களைச் செலவிட்டிருக்கிறார்கள். ஆனாலும், கடந்த இரண்டு வருடங்களாக, நியூஸ்க்ளிக் பணமோசடி செய்ததாக அமலாக்க இயக்குநரகத்தால் உறுதி செய்ய முடியவில்லை. டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவால் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் நியூஸ்க்ளிக்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. வருமான வரித்துறை எங்கள்மீதான நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்பிக்கமுடியவில்லை.

இவ்வளவுக்குப் பிறகும், நியூஸ்க்ளிக்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிரூபிக்க முடியாத அரசுக்கு எங்களின் அனைத்து தகவல்களும், ஆவணங்களும், தகவல்தொடர்புகளும் சமர்பித்தப் பிறகும், நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட பொய்க் கட்டுரையால் உந்தப்பட்ட அரசு, கடுமையான UAPA-ஐ செயல்படுத்தி எங்கள் நிறுவனத்தை மூடுவதற்கு முயல்கிறது. இதுவரை நாங்கள் வெளியிட்ட அனைத்து பத்திரிகை கட்டுரைகளும் இணையதளத்தில் கிடைக்கின்றன. எங்கு இருப்பவர்களாலும் அவற்றைப் பார்த்து படிக்க முடியும்.

டெல்லி காவல்துறை

ஆனால், இதுவரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சீனப் பிரசாரமாக கருதும் எங்கள் நிறுவனத்தின் ஒரு கட்டுரை அல்லது வீடியோவைக்கூட குறிப்பிடவில்லை என்பதுதான் ஆச்சர்யம். எங்கள் இணையப்பக்கத்தில் டெல்லி கலவரம், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றைப் பற்றிய அறிக்கைகள், ஆய்வுகள்தான் உண்மையில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் எடுக்கப்படும் தற்போதைய நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ளக் காரணம். நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறையின்மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நமது பத்திரிகை சுதந்திரத்துக்காகவும், நமது வாழ்வுக்காகவும் போராடுவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *