”சந்திரயான் – 3 இறங்கிய இடத்தில் விண்வெளி மையம்”..!! மயில்சாமி அண்ணாதுரை சொன்ன குட் நியூஸ்..!!

”சந்திரயான் – 3 இறங்கிய இடத்தில் விண்வெளி மையம்”..!! மயில்சாமி அண்ணாதுரை சொன்ன குட் நியூஸ்..!!

கோவை மாவட்டம் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களை வரவேற்கும் விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், “மாணவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிலவில் ஒன்றுமில்லை என முதலில் சென்றவர்கள் சொன்னார்கள். இந்தியரின் தனி வழிதான் சந்திராயன். அந்த தனி வழியில் சென்றதால் நீர் இருப்பதை கண்டுபிடித்தோம்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பொறியியல் படிப்புகளில் நிறைய வாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்தியாவை நோக்கி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, ஜப்பானில் நிறைய வேலை வாய்ப்பு உருவாக இருக்கின்றது. அங்கு இளைஞர்கள் குறைவு என்பதால், அந்த வேலை வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், ”கணிணி கோடிங் 5 ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என்று தெரியாது. பொறியியல் படித்துக் கொண்டால் வாழ்நாள் சிறப்பாக இருக்கும். அடுத்து விண்வெளி புரட்சி வருகிறது. செல்போன் டவர் இல்லாத வகையில், செயற்கை கோள்களால் இயக்கும் அடுத்த தலைமுறை கைபேசி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நிலவை நோக்கிய பயணங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்த போகின்றது. அடுத்த கட்ட ஆராய்ச்சி நிலவை மையமாக வைத்து இருக்க வேண்டும். நிலவில் இருப்பதை எடுத்து வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

நிலவில் இருந்து தனிமங்களை சில டன்கள் எடுத்து வந்தாலே அதை வைத்து பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சில டன் எடுத்து வந்தாலே போதும். அதற்காக சில கட்டமைப்புகளை நிலவிலும் உருவாக்க முடியும். அதற்கு நிறைய தொழில் நுட்ப தேவைகள், ஆட்கள் தேவையாக இருக்கும். அதற்கு பொறியியல் படித்தவர்கள் அதிகம் தேவைபடுவார்கள். விண்வெளி படிப்புகள் நிறைய வர வேண்டும் என்பதற்காக முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சந்திராயன் வெற்றியை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக பார்க்கின்றன. நம்முடைய முயற்சிகள் சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. நிலவில் நீர் இருப்பதும், துருவப் பகுதியில் சந்திராயன் இறக்கி இருப்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. விண்வெளியின் பருவநிலையை புரிந்து கொள்வதும் முக்கியமாக இருக்கிறது. விண்வெளிக்கு போய்வரும் தொழில்நுட்பத்தை வைத்து விமான பயணத்தையும் மாற்ற முடியும். ராக்கெட் தொழில் நுட்பத்தில் சீக்கிரமாக, பத்திரமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வரவும் வாய்ப்புகள் இருக்கிறது.

நிலவுக்கு செல்ல பிறநாடுகளுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பத்துடன் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக செல்லாமல் அனைத்து நாடுகளும் ஒன்றாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்தியா தான் செல்ல வேண்டும் என்பதைத் தாண்டி, உலகமே செல்ல வேண்டும் என பார்க்க வேண்டும். நிலவிலேயே விண்வெளி மையம் அமைக்க வேண்டும். சந்திராயன் – 3 இறங்கிய இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இருக்கிறோம். இதை நோக்கி விவாதங்கள் போய் கொண்டிருக்கிறது” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *