“மலேரியா, டெங்கு வேகமாகப் பரவி வருகிறது, டெங்கு கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.

தன் தொகுதியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்ட செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மேற்கு தொகுதியில் பழங்காநத்தம் பகுதியிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றினோம். பள்ளிகளுக்கு பல்வேறு பணிகளைச் செய்தோம். இந்தப் பகுதியில் ரூ.60 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் மதுரைக்குக் குடிநீர் கொண்டுவர ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து அமைச்சர் நேருவிடம் தெரிவித்து, பணிகளை விரைவுபடுத்தக் கூறியிருக்கிறோம். அதிகாரிகளிடம் கேட்டபோது, டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், பணிகள் எந்த அளவு நடைபெறுகின்றன எனத் தெரியவில்லை.
அது மட்டுமன்றி குடிநீர் குழாய் பதிப்பது தொடர்பாக ரூ.8,000 முதல் ரூ.25,000 வரை பணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. இதனை மாநகராட்சி மேயர், ஆணையர் கண்காணிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தினால் மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகள் பயன்பெறும். இதனால் 50 ஆண்டுகளுக்கு மதுரையில் தண்ணீர் பிரச்னை இருக்காது.

அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்ததுபோல், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் விளையாட்டு அரங்கங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். என்னுடைய மதுரை மேற்கு தொகுதியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் காண்பிக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்கு பணிகள் இன்னும் நடைபெறாமல் இருக்கின்றன. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் விரைவாகச் செய்ய வேண்டும்.
சமீபத்தில் நடந்த அ.திமு.க நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேச வேண்டாம் எனத் தலைமையால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து, எங்கள் பொதுச்செயலாளர் தெரிவிப்பார்.

பல்வேறு இடங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கே டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் இந்த துறையில் இருந்தது முதலே தற்போது வரை மிகவும் கவனமாக இருப்பார். அவருக்கே டெங்கு வந்திருக்கிறது என்பது மோசமான ஒன்று, இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com