திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட், செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில், 3,174 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சி காலத்தில் கையகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம், நடைபயணம், மறியல் போராட்டம் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் போராட்டம் என பல்வேறு கட்டங்களாக இன்று வரைத் தொடர்ந்து நடைபெறுகிறது.

கடந்த 2-ம் தேதி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நியாய விலை கடை அட்டைகளை ஒப்படைக்க, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, இரண்டு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த விவசாயிகள், திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இவர்களிடம் சார் ஆட்சியர் அனாமிகா பேச்சுவார்த்தை நடத்திப் பிறகு புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையில், போராட்ட பந்தலை காவல் துறையினர் அகற்றினர். தொடர்ந்து மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “திருவண்ணாமலை மாவட்டத்தின் 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 3,174 ஏக்கர் வேளாண் விளை நிலங்களை தமிழ்நாடு அரசு சிப்காட் சார்பில் புதிதாக தொழில் வளாகம் அமைப்பதற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பல மாதங்களாக அறவழியில் போராடி வந்த விவசாயிகளை தி.மு.க அரசு எதேச்சதிகாரப்போக்குடன் கைது செய்து சிறையிலடைத்தது. தற்போது, தாய்நிலத்தை தற்காக்க போராடிய அப்பாவி விவசாயிகளில் எழுவர் மீது சிறிதும் மனச்சான்றின்றி தி.மு.க அரசு குண்டர் சட்டம் தொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடிவரும் வேளாண் மக்களின் உரிமைக் குரலுக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்கும் தி.மு.க அரசின் செயல் கொடுங்கோன்மையாகும். எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நாடகமாடிய தி.மு.க, ஆட்சி – அதிகாரத்திற்கு வந்தவுடன் எட்டு வழிச்சாலை திட்டத்தை பசுமைவழிச்சாலை என்ற பெயரில் மீண்டும் நிறைவேற்ற முயல்வதும், கோவை – அன்னூர், திருவண்ணாமலை – பாலியப்பட்டு, செய்யாறு – மேல்மா, கிருஷ்ணகிரி – ஓசூர் உள்ளிட்ட இடங்களில் வேளாண் மக்களின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களை அபகரித்துத் தொழில் வளாகம் அமைக்க முயல்வதும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க துணைபோவதும் நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு செய்கின்ற பச்சை துரோகம்.

எந்த சிப்காட் தொழிற்சாலையும் காய், கனிகளை விளைவிக்காது, அரிசி, பருப்பினை உற்பத்தி செய்யாது என்பதனை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக பறித்து அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து இரத்தம் குடிப்பதற்கு சமமாகும். மேல்மா சுற்றுவட்டார விவசாய பெருமக்கள் விடுத்த அழைப்பை ஏற்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் நாள் நாம் தமிழர் கட்சி சார்பாக நானே நேரில் சென்று அம்மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்தில் பங்கேற்று, அவர்களின் மண்ணுரிமை கோரிக்கை வெல்ல எனது முழு ஆதரவினை தெரிவித்து உரையாற்றினேன்.
அதோடு கடந்த 6-ம் தேதி போராடும் விவசாயிகள் மீது தி.மு.க அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்தபோது, அதனை கடுமையாக கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தேன். ஓராண்டிற்கும் மேலாக மேல்மா சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தொடர்ப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வராத திமுக அரசு போராடிய ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ளது சிறிதும் மனச்சான்றற்ற அரச வன்முறையாகும்.

ஆகவே, தி.மு.க அரசு வேளாண் பெருங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தினை உடனடியாக ரத்து செய்வதுடன், எவ்வித வழக்கும் பதியாமல் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com