28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்திற்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இன்று(செப் 1) என்ன அம்சங்கள் குறித்து பேசலாம் என்பது குறித்தும், மத்திய அரசு திடீரென எந்த ஆலோசனையும் செய்யாமல் நாடாளுமன்றத்தின் அவசரக்கூட்டம் இம்மாதம் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவித்து இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி, சரத்பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், ஒமர் அப்துல்லா உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து வரும் 30-ம் தேதி இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்வது என்று நேற்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இக்கூட்டம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், “இந்தியா கூட்டணிக்கு ஒரு அமைப்பாளர், ஒருங்கிணைப்பு குழு தேவை. இப்போது நடப்பது போல் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூடி பேசிக்கொண்டிருக்க முடியாது. ஒருங்கிணைப்பு குழு அடிக்கடி கூடி பேசினால் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்றார்.
இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கேட்டதற்கு, “பிரதம வேட்பாளரை இப்போது அறிவிக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். தேர்தலுக்கு பிறகு முடிவு செய்துகொள்ளலாம்” என்றார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயும் பிரதம வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com