கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் நாகராஜபுரம், அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு 6 வயதான குகன்ராஜ் என்ற மகன் உள்ளான். குகன்ராஜ், தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது தாயிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளான். ஆனால், குகன்ராஜ் சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், குகன்ராஜை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக, அங்கு தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஒருவன் மூழ்கி கிடப்பதாக தகவல் பரவியுள்ளது. இதையடுத்து, குகன்ராஜின் பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது, குகன்ராஜ் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்துள்ளான். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்களின் மகனை தூக்கிகொண்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சிறுவனின் பெற்றோர் கதறி துடிதுள்ளனர். மேலும், பள்ளி சுற்றுச்சுவரை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தண்ணீர் தொாட்டியை மூடாததால் தான், தங்களின் மகன் இறந்ததாக கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com