மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 முதல் 10-ம் தேதி வரை மணிப்பூரில் முகாமிட்டு, ஆய்வுசெய்து செப்டம்பர் 2-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில், “மணிப்பூரில் கலவரம் நடந்தபோது ஆளும் மாநில பா.ஜ.க அரசு ஒரு பிரிவினரான மைதேயி மக்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதைத் தவிர்த்திருக்க வேண்டும். குக்கி இனத்தவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என மாநில அரசு கூறுகிறது. மாநில அரசும், மத்திய அரசும் ஜனநாயக கடமையைச் செய்வதிலிருந்து தவறிவிட்டன. மணிப்பூரின் பத்திரிகையாளர்களும் ஒருதலைபட்சமான அறிக்கைகளையே வெளியிட்டிருக்கிறார்கள்” எனக் கூறப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, இம்பாலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரத் என்பவர், “இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் அறிக்கை ஜோடிக்கப்பட்டிருக்கிற தகவல்களைக் கொண்டிருக்கிறது. அவர்களின் அறிக்கையில், ஒரு வீடு தீப்பற்றி எரியும் படம் இடம்பெற்றிருக்கிறது. அதற்கான படவிளக்கத்தில் `சுராசாந்த் பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த ஒருவரின் வீடு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கட்டடம் வனத்துறையின் அலுவலகமாகும்” எனக் குறிப்பிட்டு, காவல் நிலையத்தில் அந்தக் குழுவினர்மீது புகார் அளித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, மோதலைத் தூண்டும் முயற்சி, அவதூறு ஆகிய பிரிவுகளின்கீழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சீமா முஸ்தபா, சஞ்சய் கபூர், சீமா குஹா, பாரத் பூஷன் ஆகிய நான்கு பத்திரிகையாளர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “பத்திரிகையாளர் சங்கத்தின் குழுவினர், அங்குள்ள இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களாகவே ஓர் அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பித்திருக்கின்றனர். இதன் மூலம் மணிப்பூரில் மேலும் வன்முறையைத் தூண்ட வழிவகுத்திருக்கின்றனர். இப்போது காவல்துறை அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது” எனக் கூறினார்.

இந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பத்திரிகையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செ.திவான், “ஆகஸ்ட் மாதம் 7 முதல் 10-ம் தேதி வரை மணிப்பூர் விவகாரம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் கண்ட சாட்சி, விசாரணைகள், மணிப்பூர் முழுவதும் விரிவான பயணம், நேர்காணல்களுக்குப் பிறகே… உண்மை கண்டறியும் குழுவால் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அறிக்கையில் புகைப்படம் தொடர்பாக ஒரு பிழை ஏற்பட்டது. அது சுட்டிக்காட்டிய பிறகு உடனடியாக சரி செய்யப்பட்டது. அறிக்கையைத் தொடர்ந்து, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர் சந்திப்பில் பேசியதை கேட்ட பிறகு, ஊடகவியலாளர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்த கடுமையான அச்சங்கள் எழுந்திருக்கின்றன. அதாவது இ.ஜி.ஐ மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும், ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதாகவும் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் பயன்படுத்திய வார்த்தைகளின் குறிப்பிட்ட பரிமாணங்களைக் கவனித்தால் எங்கள் அச்சத்தின் வீரியம் தெரியவரும்” என்றார்.
மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனு அகர்வால், “இந்த வழக்கு விசாரணையைத் திங்கள்கிழமை திட்டமிடக் கோரிக்கை விடுக்கிறோம். அல்லது மனுதாரர்களை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட வேண்டும்” எனக் கோரினார். அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “செப்டம்பர் 11 அன்று இந்த வழக்கை விரிவான விசாரணைக்குப் பட்டியலிடுகிறோம்.
மேலும் பத்திரிகையாளர்கள்மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என மணிப்பூர் காவல்துறைக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையைப் பத்திரிகையாளர்கள் தரப்பு திங்கள்கிழமை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த விசாரணை வரை எஃப்.ஐ.ஆர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com