பாஜக-வில் பதவியில் நீடித்தாலும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பங்கஜா முண்டே தோல்வி அடைந்தார். ஆனாலும் மேலவை உறுப்பினர் பதவி அளித்து, அதன் மூலம் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார். ஆனால் பங்கஜா முண்டேயிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. இதற்கு தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பட்னாவிஸ் மீது பங்கஜா முண்டே கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
தனது அதிருப்தியை பங்கஜா முண்டே வெளிப்படையாகவும் தெரிவித்துவிட்டார். ஆனாலும் பங்கஜா முண்டே பா.ஜ.க.வில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் சட்டமேலவை தேர்தலில் பங்கஜா முண்டேயிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதையடுத்து பங்கஜா முண்டே தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் வகையில் இம்மாதம் 4-ம் தேதியில் இருந்து சிவசக்தி யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையில் பா.ஜ.க.தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தேவேந்திர பட்னாவிஸிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த யாத்திரையை நடத்தியதாக தெரிகிறது. இதனால் அவர் மீது பட்னாவிஸ் மேலும் அதிருப்தியடைந்துள்ளார்.
இந்நிலையில் பங்கஜா முண்டே நடத்தி வரும் சர்க்கரை ஆலைக்கு மத்திய அரசு 90 கோடி ஜி.எஸ்.டி.வரி நிலுவை தொகை செலுத்தும்படி கூறி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் இருக்கும் வைத்யநாத் சர்க்கரை ஆலை ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா சர்க்கரை ஆலைகள் புதிய கடன் வாங்கிக்கொள்ள மத்திய கூட்டுறவுத்துறை வங்கிகளுக்கு உத்தரவாதம் கொடுத்தது.

ஆனால் இதில் பங்கஜா முண்டேயின் சர்க்கரை ஆலைக்கு மட்டும் அரசு உத்தரவாதம் கொடுக்கவில்லை. இது குறித்து பங்கஜா முண்டே அளித்த பேட்டியில்,”நிதியுதவி கேட்டு 8 சர்க்கரை ஆலைகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தன. அதில் எங்களது சர்க்கரை ஆலைக்கு மட்டும் நிதி கிடைக்கவில்லை. அந்த நிதி கிடைத்து இருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது. சர்க்கரை ஆலையை வங்கி ஒன்றிடம் அடமானம் வைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார். ஜி.எஸ்.டி.நிலுவைத்தொகை கட்டப்படவில்லையெனில் சர்க்கரை ஆலை சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கஜா முண்டேவின் தன்னிச்சையான யாத்திரைக்கும் இந்த ஜி.எஸ்.டி நோட்டீஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தான் இப்போதைய மகாராஷ்டிரா அரசியலின் கேள்வி!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com