சென்னை அருகே பிரபல ரவுடி எபினேசர் என்பவர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை நசரத்பேட்டை அடுத்துள்ள, திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர்(25). பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, கொலைமிரட்டல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், எபினேசர் நேற்று இரவு, திருவள்ளூர் அடுத்துள்ள கடம்பத்தூர் பகுதியில் இருந்து, ஆட்டோவில் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்து இருக்கின்ற மண்ணூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று, இவருடைய ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியது.
இதனைத் தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய ஆறு பேர் கொண்ட கும்பல்,ரவுடி எபினேசர் ஓட்டி வந்த ஆட்டோவின் மீது, நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அதன் பிறகு, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால், அதிலிருந்து தப்பிய எபினேசர், அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச் சென்று, சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த எபினேசர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுவிட்டது.
இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், எபினேசரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பழிக்கு, பழியாக எபினேசர் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com