இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. திடீரென எகிப்து வீரர்கள் சிலர் இஸ்ரேல் பீரங்கி தாக்குதலால் காயமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக போர் நடந்து வரும் நிலையில், முதலில் ஹமாஸ் படை தாக்குதல்களை நடத்தி, இஸ்ரேல் நாட்டவர்களை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் தாக்குதல்களில் இறங்கியது. காசா பகுதி மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படி இருக்க, நேற்றையதினம் இஸ்ரேல் நடத்திய பீரங்கித் தாக்குதலில் இருந்து வந்த குண்டுகள் எகிப்து நாட்டினைத் தாக்கியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், திடீரென ஏவுகணை எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக கூறியிருந்தாலும், அவர்கள் நேரடியாக இதுவரை மோதலில் ஈடுபடவில்லை. மேலும், சர்வதேச வர்த்தகத்தின் அடிநாதமாக இருக்கும் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் தான் உள்ளது. உலகின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 12 வீதமானவை இந்த சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடக்கிறது.
இந்தப் போரில் எகிப்து உள்நுழைந்து சூயஸ் கால்வாய் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உலகின் அனைத்து நாடுகளுமே பாதிப்படையும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அனைவர் மத்தியிலும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என்றும் தவறுதலாக எகிப்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் இந்த தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com