சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. ராஜஸ்தான் மாநில முடிவுகள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தானில் முதல்வராக இருந்த அசோக் கெலாட் கட்சி எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். 1998 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த அசோக் கெலாட் 2018-ம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

மூன்றாவது முறையாக அசோக் கெலாட் முதல்வராக சச்சின் பைலட் கடும் எதிர்ப்பை காட்டினார். இதையடுத்து கட்சித்தலைமை சச்சின் பைலட்டிற்கு துணை முதல்வர் பதவி கொடுத்து சமாதானப்படுத்தியது. அதன் பிறகு இடையில் சச்சின் பைலட் 2021-ம் ஆண்டு முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பா.ஜ.க பக்கம் செல்ல நினைத்த போது கட்சி தலைமை அவரை சமாதானப்படுத்தியது. ஆனால் பறிபோன துணை முதல்வர் பதவி சச்சினுக்கு திரும்ப கிடைக்கவில்லை. ஏற்கனவே சச்சின் பைலட் மீது கோபத்தில் இருந்த அசோக் கெலாட் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓரங்கட்ட ஆரம்பித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அசோக் கெலாட்டையும் சச்சின் பைலட்டையும் கட்சி தலைமை சமாதானப்படுத்த பல முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஒவ்வொரு முறையும் சேர்ந்து பணியாற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு வெளியில் செல்லும் அசோக் கெலாட், மற்றும் பைலட் தங்களின் மாநிலத்திற்கு சென்றதும் வழக்கம் போல் மோதல் போக்கையே தொடர்வார்கள். அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பணியாற்றிய பழைமையாக காங்கிரஸ் தலைவர் ஆவார்.
இதனால் அவர் மீது அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமை இருந்தது. சச்சின் பைலட்டும் அவ்வப்போது முதல்வருக்கு எதிராக களத்தில் இரங்குவார். இதன் காரணமாகவே தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தனர். இதுவும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தேசியவாதத்தை பா.ஜ.க. முழுமையாக விதைத்து இருந்தது. அனால், தன்னால் அனைத்தும் முடியும் என்று நினைத்து அசோக் கெலாட் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் இலவசங்களையும் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார்.

ஆனால் அவை எதுவுமே கைகொடுக்கவில்லை. ஒரு புறம் மோடி அலை என்றால் மற்றொரு புறம் அசோக் கெலாட்டின் எதிருப்தியாளர்கள் என இரண்டு பக்கம் இருந்து ஒரே நேரத்தில் தாக்கியதால் அசோக் கெலாட்டால் தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விட்டது. அதோடு ராஜஸ்தான் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
1970-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அசோக் கெலாட் முதல்வர் பதவியை நான் விட்டாலும் என்னை முதல்வர் பதவி விடுவதில்லை என்று கூறிக்கொண்டிருப்பார். ஆனால் இப்போது கோஷ்டி மோதலால் கைவிட்டு போகிறது ராஜஸ்தான்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com