மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “மகளிருக்காக எத்தனை திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போல எந்த திட்டமும் இல்லை.

அன்று கருணாநிதி அறிவித்த 2 ஏக்கர் நிலம் போல இன்று மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
தினசரி வரும் செய்திகளை பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 5 நாட்களாக மகளிர் அலைவதும், இணையதளம் வேலை செய்யவில்லை என்பதும்தான் செய்தியாக உள்ளது.

முட்டாள்தனமாக 60 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். வருமான வரம்பு அதிகம் என தள்ளுபடி செய்திருக்கின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள விதிமுறைகளில் தளர்வுகளை கொண்டு வர வேண்டும்.
அதை விடுத்து புதிய மனுக்களை கொடுக்க சொல்கின்றனர். ஆனால், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களின் நிலை என்ன என தெரியவில்லை. இப்படியே தள்ளுபடி செய்து கொண்டே போனால் விரைவில் திமுகவை இந்த மக்கள் தள்ளுபடி செய்துவிடுவார்கள்.

தகுதி உள்ளவர்களை அடையாளம் கண்டு உச்சவரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும். அதை விடுத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்துவிட்டு தகுதி உள்ளவர்களை தேடுகின்றனர்.
பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்திக்க எடப்பாடியார் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடி ஆய்வு செய்ய உள்ளார். அவர் வரும்போது அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com