“விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டத்தை நிவர்த்தி செய்யவில்லை, ஆனால், முதலமைச்சரோ விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மஹாளய அமாவாசை முன்னிட்டு மதுரையில் பார்வையற்றோருக்கு அரிசியும் அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ” நிர்வாகத் திறமையற்று திமுக அரசு உள்ளது. அனைத்து திட்டங்களிலும் குளறுபடியின் மொத்த வடிவமாக உள்ளது. எந்த துறையும் முழுமையாக செயல்படவில்லை. கொடுத்த 520 தேர்தல் வாக்குறுகளில் 100 சகவிகிதம் நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் பொறுப்பில் இருந்துகொண்டு ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பாதிப்படைந்த மக்கள் போராடி வருகிறார்கள்.
ஒரு சோறு பதம் போல, ஆண்டுக்கு 10 லட்சம் பேர் கல்லூரி படிப்பை முடித்துக் வெளியே வருவதால் 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று கூறினார்கள். அதேபோல் காலியாக உள்ள ஐந்தரை லட்சம் அரசுப்பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறினார்கள். இதுவரை 11 ஆயிரம் வேலைதான் வழங்கப்பட்டுள்ளது.
காவிரியில் ஜீவாதார உரிமை பறிபோகிறது, மேக்கேதாட்டூ அணை கட்டிவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். கடும் உணவு பஞ்சம் ஏற்படும்.

மேக்கேதாட்டூ அணையை 69 டிஎம்சி கொள்ளவில் கட்டுவதற்காக கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளதற்கு முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது மத்திய அரசை மட்டுமல்லாது, கர்நாடக அரசையும் வலியுறுத்தி கண்டிக்க வேண்டும் என்று எடப்பாடியார் கேள்விகளை முன் வைத்தார். ஆனால், முதலமைச்சர் மழுப்பலாக பதில் கூறி திசை திருப்பினார். மாநில உறவுகள் முக்கியம், உரிமை அதைவிட முக்கியம். உரிமைகள் பறிபோனால் தமிழகம் பாலைவனமாகிவிடும். டெல்டா நெற்களஞ்சியத்தை காவு கொடுத்துவிட்டு எதை காப்பாற்றப் போகிறோம்?
41 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணை தற்போது 39 அடிக்கு கீழே சென்றுவிட்டது. சரியான திட்டமிடவில்லை, இது விளம்பர அரசாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவைக்கு பயிர் காப்பீட்டை அரசு செய்யவில்லை. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்து இடுபொருள் மானியம் உட்பட ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ. 84,000 வழங்கினார். ஆனால் தற்போது ஒரு ஹேக்டேருக்கு 13,000 ரூபாய் வழங்கப்படுகிறது . அப்படியென்றால் ஒரு ஏக்கருக்கு 5,500 ரூபாய் ஆகும். இது யானை பசிக்கு சோளப்பொரி போல விவசாயி வயிற்றில அடிப்பது போல் இருக்கிறது.

உதயநிதி ஸ்டாராக இருப்பதால் துறையும் ஸ்டாராக வளர்ந்து இருக்கிறது என்று ஒரு அரசு விழாவில் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார். இங்கே விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டம் எதையும் நிவர்த்தி செய்யவில்லை, ஆனால் முதலமைச்சரோ விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் இயற்கை நட்சத்திரம் இல்லை, செயற்கை நட்சத்திரம். தனது தாத்தா, தந்தை, குடும்ப செல்வாக்கால் செயற்கை நட்சத்திரமாகத்தான் உயர்ந்துள்ளார். மக்கள் செல்வாக்கால் ஜொலிக்கவில்லை. செயற்கை நட்சத்திரம் பிறரின் வெளிச்சத்தைதான் சார்ந்திருக்கும். சுயமாக வெளிச்சம் தர முடியாது.
மகளிர் உரிமை காப்பதில் இந்தியாவிற்கு வழிகாட்டும் இயக்கமாக அதிமுக உள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்க ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தார். அதேபோல் மகளிர் காவல் நிலையங்கள், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் அதனை எடப்பாடியாரும் செயல்படுத்தி வந்தார்” என்றார் .
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com