ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்து ராஜஸ்தான் அரசாங்கத்தை பாஜக கடுமையாக விமர்சித்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர் அவரின் உடல் பாகங்கள் நிலக்கரி உலையில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பில், “பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகளில், ராஜஸ்தான் பத்தாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள அஸ்ஸாம் மற்றும் மத்தியப் பிரதேசம் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. ராஜஸ்தானை இழிவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சி (பாஜக) தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் வதந்திகளைப் பரப்புகிறார்கள்” எனக் காட்டமானார்.
மேலும், “பாஜக தலைவர்களும், அமைச்சர்களும் ராஜஸ்தானை இழிவுபடுத்த வேண்டுமென்றே நோக்கத்துடன் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் அவர்களின் உண்மையான நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது.” என்றார்.
பாஜக விமர்சனங்களுக்கு தொடர்ந்து பதிலளித்த கொலாட், “போலி என்கவுன்டர்களுக்கும் உண்மையான என்கவுண்டர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. ராஜஸ்தானில் போலி என்கவுண்டர்களுக்கு இடம் இல்லை.” என்று மறைமுகமாக உத்தரப்பிரதேச அரசை சாடினார்.
பில்வாராவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அம்மாநிலத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், போலீஸார் விழிப்புடன் இருந்திருந்தால் சிறுமியை காப்பாற்றியிருக்கலாம் என்று அவர்கள் கூறினார்.
இது குறித்து பேசிய பாஜக எம்.பி லாகெட் சட்டர்ஜி, `மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது’ என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com