`தடுப்புச்சுவர் கட்டுவதில் விதிமீறல் செய்கிறார்கள்' –

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்திருக்கிறது செட்டியார்பட்டி. இந்த ஊரிலுள்ள கண்மாயில், கரை பலவீனமாக இருக்கும் இடங்களில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்காக ஊராட்சி சார்பில் 2021-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் ரூ.9.96 லட்சத்துக்கு, ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்மாயில், வெள்ள தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, கண்மாய் கரை ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட இடத்தில் வேலை நடைபெறவில்லை போன்ற காரணங்களால் பணிகள் அரசு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன.

பணிகள்

இந்த நிலையில், அரசு அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டுவராமல் கடந்த இரண்டு மாதங்களாக இந்தக் கண்மாயில் வெள்ளத்தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயமறிந்த அந்தப் பகுதியினர், முறையான திட்டமிடலின்றி பணிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், தனிநபர் சுயலாபத்துக்காக கண்மாய் கரை ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க கவுன்சிலரின் கணவர் செந்தில் நம்மிடம் பேசுகையில், “கண்மாய் கரையை ஒட்டியே தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை சேர்மன் ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இவரும், எங்கள் பஞ்சாயத்து தலைவர் சிங்கராஜூம் நெருங்கிய நண்பர்கள். ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான பள்ளிக்கு வாகனங்கள் சென்றுவர சரிவர பாதைவசதி கிடையாது. எனவே, கண்மாய் கரை வழியே பள்ளி பேருந்துகள் சென்றுவரும் வகையில் பாதை அமைத்திட முயன்று வந்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.

இந்த நிலையில், மழைக்காலங்களில் கண்மாயில் நீர் நிரம்பினால், பள்ளியின் உள்ளே நீர்கசிவு ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காக, சேர்மன் சிங்கராஜ் ஆதரவோடு, 2021-ம் ஆண்டில் டெண்டர் விடப்பட்ட பணித்திட்ட ஒப்பந்தத்தை மீறி பள்ளிக்கூடத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு சுவரை அமைத்திருக்கின்றனர். இதற்காக கண்மாயின் இயற்கை பரப்பளவைக் குலைத்து கரையிலிருந்து 20 அடிக்கு முன்னதாக வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி புதிதாய் கட்டப்பட்ட வெள்ளத்தடுப்புச் சுவருக்கும், இயற்கையாக அமைந்த கண்மாய் கரைக்கும் இடையேயான பள்ளத்தைக் கண்மாய் மண் கொண்டே சமன்செய்து கரையை அகலப்படுத்துகின்றனர். இது முழுக்க, முழுக்க பள்ளி தாளாளர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக விதிமீறலுடன் கட்டப்பட்ட அமைப்பாகும். எனவே, இந்தப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். யூனியன் ஒப்பந்த திட்டப்படியே முறையாக பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், கண்மாய் கரையில் குடிசைக்கட்டி குடியேறுவோம். அதிகாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதவரைக்கும் எங்களையும் யாரும் கேள்விக் கேட்கக் கூடாது” என்றார்.

மண் அள்ளுதல்

பணி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன்‌ பேசுகையில், “2021-ம் ஆண்டு தடுப்புச்சுவர் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டபோதே எதிர்ப்பு கிளம்பியதால், அதிகாரிகளின் உத்தரவின்‌பேரில் அந்த பணிகளை மேற்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டேன். தற்போது, சப்-கான்ட்ராக்ட் மூலமாக பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன்‌ தான் தடுப்புச்சுவர் கட்டும் பணி செய்துவருகிறார். ஆகவே, கண்மாயில் தற்போது நடைபெற்றிருக்கும் பணிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.

பள்ளி தாளாளர் ரவிச்சந்திரனிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, “முறையாக டெண்டர் விடப்பட்டு, அதிகாரிகளின் உத்தரவின்பேரில்தான் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடைபெறுகின்றன. இப்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ஆரம்பத்திலேயே ஏன் வரவில்லை. இத்தனைக்கும், தொகுதி எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், சேர்மன் சிங்கராஜ் என எல்லோர் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஏற்பட்ட பின்புதான் பணிகளை தொடங்கி இருக்கிறோம். பின்பு எதற்காக இப்படி தெரிவிக்கிறார்கள்” என்றார்.

பள்ளி தோற்றத்தில்…

வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோரிடம் பேசுகையில், “அரசு பொறியாளர்கள் திட்டமிட்டு கொடுத்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடைபெறவில்லை என்ற காரணத்திற்காகத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் யூனியன் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவராமலேயே அந்த இடத்தில் மீண்டும் பணிகளை தொடங்கியிருக்கின்றனர். இது குறித்து தகவலறிந்ததும், பணிகளை நிறுத்தச் சொல்லி பலமுறை எச்சரிக்கை கொடுத்துவிட்டோம். போலீஸிலும் புகார் அளித்திருக்கிறோம். ஆனாலும் அவர்கள் யாருடைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பணிகளை செய்திருக்கின்றனர். தொடர்ந்து, கண்மாய் பரப்பில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே ஆட்சியரின் உத்தரவுபடி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றனர்.

தொகுதி எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன், “ஆரம்பத்தில், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், இப்போது திடீரென்று முட்டுக்கட்டை போடுவதேன்… அதேபோல, தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வெளிநபர்கள்கூட அல்ல, கட்சியில் உறுப்பினராக இருப்பவர். இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் வேலையை திடீரென முடக்கிப்போட்டிருப்பது, அவர் வேறேதும் ஆதாயத்தை எதிர்பார்த்து ஏமாந்திருப்பதால்கூட இருக்கலாம்” என்றார்.

சேர்மன் சிங்கராஜிடம் பேச பலமுறை முயன்றோம். ஆனால், நம்முடைய அழைப்புகளுக்கோ, குறுஞ்செய்திகளுக்கோ எவ்வித பதிலும் இல்லை. அவர் பதிலளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர், அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *