வாக்குச்சாவடிகளுக்கான தி.மு.க. முகவர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்ற இந்தக் கூட்டம் தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான முகவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல. தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் நாட்டு மக்களைப் பிளவுப்படுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக தி.மு.க இருக்கிறது. தம்பி உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த இயக்கமும் தத்துவமும் தழைக்கும். உண்மையில் சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸைப் போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும் ” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com