தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காகச் சென்ற தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, “தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை, தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும். எச்சரிக்கை முன்னேற்பாடுகளை சரியாக எடுத்திருக்க வேண்டும். தமிழக மழை வெள்ளத்தில் திராவிட மாடல், திண்டாடும் மாடலாக மாறிவிட்டது” என்று தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழிசையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல, “தமிழக அரசை குறை கூறுவதற்கு தமிழிசைக்கு எந்த அருகதையும் கிடையாது.


புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, தான் இன்னும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் என்ற நினைப்பிலேயே தினம் தினம் அரசியல் விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற பழைய துருப்பிடித்த வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி அவர் பா.ஜ.க தலைவராக இருந்தபோது என்னவெல்லாம் அரசியல் பேசினாரோ, அதே பேச்சைத்தான் தற்போது ஆளுநராக இருக்கும்போதும் பேசி வருகிறார். தமிழிசை அவர்கள் முடங்கிக் கிடக்கும் புதுச்சேரியை முதலில் மீட்டெடுக்கட்டும். அதன் பிறகு அவர் தமிழக அரசைப் பற்றி பேசட்டும்” என்று கடுமையாக விமர்சித்ததுடன், புதுச்சேரியில் தீர்வு காணப்படாமல் இருக்கும் பிரச்னைகளையும் பட்டியலிட்டிருந்தார், புதுச்சேரி எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா.
நன்றி
Publisher: www.vikatan.com