புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி மாநிலத்தின் கலாசாரமும், பெண்களின் பாதுகாப்பும் சீரழிக்கப்பட்டுவிட்டது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோ பார், மசாஜ் கிளப்புகள், ஸ்பா, பப், கேபரே நடனம் மற்றும் அதன் தொடர்ச்சியாக பாலியல் தொழிலும் தங்குதடையின்றி நடக்கிறது. புதுச்சேரியை ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தாங்கள் நடத்தும் மதுபானக் கூடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழிலை செய்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவிகளை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றின் மூலம் தொடர்பு கொண்டு, அந்த பெண்களை ஏமாற்றி துன்புறுத்துவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, ‘என் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்’ என்று பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றனர்.


இது மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்து தங்கி படிக்கின்ற மற்றும் வேலை செய்கின்ற அப்பாவி பெண்களை, சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் தள்ளிவிடுகின்றனர். அவர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுபோல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறை, கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது. பல சட்டமன்ற உறுப்பினர்களும், ஆளுங்கட்சியில் உள்ள பல அரசியல் பிரமுகர்களும் தங்களின் தனிப்பட்ட வருமானத்திற்காக ரெஸ்டோ பார், மதுபானக் கூடங்கள், மசாஜ் சென்டர்களை நடத்துவதால், காவல்துறை உயரதிகாரிகள் அதை பார்வையாளராக நின்று பார்த்து வருகின்றனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புதுவை மாநிலம் முழுவதும் கலாசார சீரழிவு ஏற்படுவதுடன், புதுவை என்றாலே மது, மாது, குத்தாட்டம் என்கின்ற எண்ணம்தான் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படும். புதுச்சேரி பெண்களை திருமணம் செய்ய நினைக்கும் வேறு மாநிலத்தவர்கள், யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, துணைநிலை ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது தவறான ஒன்றாகும்.
நன்றி
Publisher: www.vikatan.com