“விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டதா?”
“அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. அனைத்து பார்லிமென்ட் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எப்படி செயல்பட வேண்டும் என பயிற்சி கொடுத்து வருகிறோம். அது முடிவடையும் தருவாயில் இருக்கிறது”

“2024 தேர்தலில் காங்கிரஸ் முன் இருக்கும் சவால்கள் என நீங்கள் கருதுவது?”
“பா.ஜ.க மதத்தின் பெயரால் மக்களை மடைமாற்றும் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் முன்னெடுக்கும் நல்ல விஷயங்கள் குறித்து மீடியாக்களும் பேசுவது இல்லை. நாங்கள் வாழ்வியல் சம்பந்தமாக இந்த தேர்தலை கொண்டு செல்கிறோம். பா.ஜ.கவினர் மதம் சார்ந்து கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை.

அதேபோல் இந்தியாவில் இருக்கும் தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற பல துறைகள் நியாயமாக நடக்கிறதா என்பது கேள்விக்குறிதான். மேலும் பா.ஜ.கவிடம் பணபலம் அதிகமாக இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கலாம் என்ற நிலையில் இருக்கிறார்கள். இதுதான் காங்கிரஸ் முன்பு இருக்கும் மிகப்பெரிய சவால்கள்.”
“எத்தனை தொகுதிகளை கிடைக்கும் என நம்புகிறீர்கள்?”
“கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுடன் ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் அது குறித்து சொல்ல முடியும். இருப்பினும் கணிசமான இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.”

“உங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வார்ரூம் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே?”
“இதுபோன்ற காலகட்டத்தில் இந்த பொறுப்பை எடுத்து இருப்பதை மிகவும் சவாலானதாக பார்க்கிறேன். என்னால் அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன்”

“சமீபத்திய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பெரியண்ணன் மனப்பான்மையில் செயல்பட்டதால் தான் தோல்வி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுத்திருக்கிறதே?”
“அப்படியான விமர்சனம் எழுந்ததாக தெரியவில்லை. மாநில தேர்தல்களை பொறுத்தவரையில் நிலைமை வேறு. கேரளாவில் நாங்கள் சிபிஐ (எம்) உடன் சண்டை போடுகிறோம். ஆனால் மேலே கூட்டணியில் இருக்கிறோம். சித்தாந்த ரீதியாக ஒன்றாக இருக்கிறோம். எனவே மாநில தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒப்பிட முடியாது.

சீட் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை தற்போதுதான் தொடங்க போகிறோம். சம்பந்தப்பட்ட விஷயத்தில் தொடர்புடையவர்கள் இதுபோல் விமர்சனங்களை செய்வதாக தெரியவில்லை. பின்னால் இருப்பவர்கள்தான் பேசுகிறார்கள்”
“ஆனால் இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கம், கேரளாவின் அதிக முரண் நிலவுகிறதே?”
“எந்த இடத்தில் யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள் அந்த இடத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான் அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கும் விஷயம். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும் இடங்களை காங்கிரஸ் நிச்சயம் விட்டுக் கொடுத்துதான் செல்லும்.”

“பா.ஜ.க மீண்டும் பிரதமராக மோடியை முன்னிறுத்துகிறது. ஆனால் காங்கிரஸால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறதே?”
“மீண்டும் பிரதமராக மோடியை முன்னிறுத்துவது பாஜக-வுக்குதான் பின்னடைவு. என்னை பொறுத்தவரை காங்கிரஸுக்கு பின்னடைவு இல்லை. இந்தியா கூட்டணி தலைவர் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்கும் தலைவர்கள்தான் பிரதமராக வருவார். நாங்கள் கொள்கை ரீதியாக சண்டை போடுகிறோம். அவர்கள் ஹீரோயிசத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். எனவே யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”

“மீண்டும் மோடியை முன்னிறுத்துவது பாஜகவுக்கு பின்னைடைவு என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?”
“2019-ல் அவர்களுடைய அதிகபட்ச வெற்றியை நாம் பார்த்தோம். ஆனால் இன்று இந்து, இஸ்லாமிய பிரச்னையை ஏற்படுத்தி விடுவார்களோ என பலரும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள். இதேபோல் 2004-ல் ‘India Shining’ என பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் முடிவில் தோல்விதான் கிடைத்தது. ஒவ்வொரு முறையும் அவர்கள் ‘india shining’ என கூறும் போது பசியும், பட்டினியுமாக இருந்த மக்களுக்கு வெறுப்பாக இருக்கிறது.

இன்று மோடி அம்ரித் கால்… அம்ரித் கால் என பேசிவருகிறார். இது எவ்வளவு பேருக்கு வெறுப்பை தூண்டும் என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும். நிச்சயமாக மோடி ஒரு வீக் பாயின்ட் தான். ஒவ்வொரு தேர்தலிலும் மக்களிடத்தில் அதிருப்தி இருக்கும் என்பதாலேயே வேட்பாளர்களை மாற்றிவிடுவார்கள். அதே வெறுப்பு மோடி மீதும் இருக்கும் தானே?”
“ஆனால் 12 மாநிலங்களில் தனி பெரும்பான்மையாக பா.ஜ.க இருக்கிறது. அந்த இடங்களில் வெற்றி பெற்றாலே அவர்களால் கணிசமான தொகுதிகளை கைப்பற்றி விட முடியுமே?”
“நான் ஏற்கனவே கூறியது போல மாநில தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு”

“உங்களை பொறுத்தவரையில், இரண்டுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது?”
“அதாவது நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் காங்கிரஸ், பா.ஜ.க இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது என மக்கள் பார்ப்பார்கள். ஆனால் மாநில தேர்தலில் லோக்கல் கேண்டிடேட் எப்படி பட்டவர். அவருடைய நடத்தை என்ன?, தொகுதிக்கு செய்தது என்ன? என்பதை மக்கள் பார்ப்பார்கள். எனவே இரண்டும் வேறு”

“இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக உங்கள் சாய்ஸ்?”
“இந்தியா கூட்டணி யாரை தேர்வு செய்கிறதோ அவர் பிரதமராவார். நாங்கள் விரும்புவது ராகுல் காந்தியை தான். ஆனால் அவர்தான் இந்தியா கூட்டணியின் தலைவராக வர வேண்டும் என சொல்ல மாட்டேன். இருப்பினும் இறுதி முடிவுயை கூட்டணிதான் எடுக்கும். ராகுல் காந்தி வந்தால் இந்தியாவுக்கு நல்லது”

“ராகுல் காந்தி இரண்டாவது நடை பயணத்தில் பிரத்தியேக திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா?”
“ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வியூகங்கள் இருக்கும். இது முழு நடைபயணம் அல்ல. காலை நேரத்தில் பேருந்தில் பயணிப்பார். மதியம் நடை பயணம் செய்வார். நாள் தோறும் 100 கி.மீ பயணிப்பார். இது நியாயத்தை, சமூக நீதியை தேடி செல்லும் யாத்திரை என்பதால் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”
பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்படவில்லை என்பதில் நிதீஷ் குமார் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறதே?
“அதுபோன்ற பிரச்சினை ஏதும் இல்லை. புரிதல் இல்லாமல் சிலர் பேசலாம். கூட்டணியில் இருக்கும் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள்”

“மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக கார்கேவையும், அவர் போட்டியிடும் தொகுதியில் பிரியங்கா காந்தியையும் அறிவிக்க வேண்டும் என மம்தா கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?”
“கார்கே ஒரு அருமையான தலைவர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் பிரதமராக வரவேண்டும் என கூறுவது வரவேற்கக் கூடிய விஷயம். அது மம்தாவின் விருப்பமாக இருக்கலாம். அல்லது அனைவரின் விருப்பமாகவும் இருக்கலாம். எனவே அதில் தவறு ஏதும் இல்லை. கூட்டணியில் இருக்கும் அனைவருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. மோடியை வீழ்த்த வேண்டும் என்பது எங்களின் பிரதான நோக்கம் இல்லை. பா.ஜ.க எனும் பாசிச சக்தியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பிரதானம். அதற்காக அனைத்து இடங்களிலும் கடுமையாக சண்டையிடுவோம். அவரை எதிர்த்து யார் போட்டியிடுவார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும்”

“நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் ராமர் கோயில் விழாவை பா.ஜ.க முன்னெடுத்து இருக்கிறதே?”
“அதுதான் அவர்களுக்கு தெரிந்த அரசியல். வேறு என்ன தெரியும்?. எனக்கு இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நான் எதிர்பார்த்ததுதான்”

“ராமர் கோயில் விழாவில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை என பாஜக விமர்சனம் செய்கிறதே?”
“இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நீண்ட நாட்களுக்கு முன்பே தனது நிலைப்பாட்டை கூறி விட்டது. மதம், நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாரும், யாரையும் நிறுத்த முடியாது. அவர்கள் சோனியா ஜி, கார்கே ஜிக்கு அழைப்பிதழ் கொடுத்திருப்பார்கள். அவர்கள் அதை நிராகரித்து இருக்கலாம். சங்கராச்சாரியார் அரசியல் ஆக்குகிறார்கள் என்று சொல்லி விட்டு போகவில்லை. அதேபோல் சோனியா ஜி, கார்கே ஜி நிராகரித்து இருப்பார்கள். அது அவர்களுடைய சொந்த விருப்பம். நான் சென்றால் யாரும் கேட்க மாட்டார்கள்.”

“ஆனால் இந்துக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸை அவர்கள் சொல்கிறார்களே?”
“அவர்களுடைய அரசியல் இதுதான். அதைத்தானே அன்றில் இருந்து செய்து வருகிறார்கள். தேசத்துக்கு எதிரானது என சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சியை பார்த்தே சொல்கிறார்கள். அது அவர்களுடைய அரசியல். அதற்கு மேல் எந்த வளர்ச்சியும் இருக்காது”

தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்க்கு எத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?”
“தலைவர்கள் அனைவரும் அமர்ந்து எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி பெறுவார்கள் என ஆலோசனை செய்து அதனை முடிவு செய்வார்கள்”

“சமீபத்தில் புயல் நிவாரண நிதி வழங்க சென்ற கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரை முதல்வர் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறதே?”
“ஐடியாலஜி ரீதியாக இரண்டும் ஒரே கருத்து கொண்ட கட்சி. ஒரே வழியில் தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.”

“நீங்கள் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே?”
“நான் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறேன். என்ன செய்தால் சரியாக இருக்கும் என கட்சி முடிவு எடுக்கும். அதை நான் ஏற்றுக் கொள்வேன்.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com