புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சராக இருந்தவர் காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏவான சந்திர பிரியங்கா. போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை வைத்திருந்த இவர், சாதி மற்றும் பாலினரீதியில் தாக்கப்படுவதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது குற்றச்சாட்டுகள் புதுச்சேரி அரசியலை உலுக்கிய நிலையில், “அமைச்சராக அவரது செயல்பாடுகளில் திருப்தியில்லாத காரணத்தாலேயே, முதல்வர் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கும்படி 6 மாதங்களுக்கு முன்பே என்னிடம் கூறினார்.


ஆனால் நான்தான் அப்போது பெண் அமைச்சர் ஒருவர் இருக்கட்டும். அவரை அழைத்துப் பேசுங்கள் என்று அவரிடம் கூறினேன். அதன் பிறகும் சந்திர பிரியங்காவின் செயல்பாடுகளில் திருப்தியில்லாததால், அவரை நீக்கும்படி மீண்டும் என்னிடம் கேட்டார் முதலமைச்சர். அதனால் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பாகவே பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதுகுறித்த முதல்வரின் கடிதம் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது” என்றார் துணைநிலை ஆளுநர் தமிழிசை. ஓரிரு நாட்களில் கிடைத்திருக்க வேண்டிய அனுமதி, நாள் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டதால், முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று தகவல் பரவியது.
நன்றி
Publisher: www.vikatan.com