முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு தேவையான மண், மணல், ஜல்லி போன்ற பல தேவைகளையும்கூட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்தோம். ஆனால் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பாக அம்மூலப் பொருள்களை கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. 2021-ல் வந்த தி.மு.க ஆட்சியாளர்களாலும், குறிப்பாக மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜின் அலட்சியப் போக்காலும் நான்குவழிச் சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்று ஒப்பந்ததாரர்கள் திட்டப்பணிகளை இடையில் நிறுத்தி விட்டுச் சென்றனர். மாவட்டத்தின் இயற்கை அழகை காப்பாற்ற போகிறேன் என்ற அமைச்சரின் தவறுகளால், நம் மாவட்டத்தின் மலைகளையும் இயற்கை வளங்களையும் தொடர்ந்து நாம் இழந்து வருகிறோம். இதுபோல் நம் மலைகளும், கனிமங்களும் அழிக்கப்பட்டால் ஒரு சில ஆண்டுகளிலேயே நம் மாவட்டம் பொட்டல் நிலமாக மாறும் ஆபத்து ஏற்படும். நான்குவழிச் சாலையை முடிப்பதில் முட்டுக்கட்டையாக இருந்த அமைச்சரின் தவறால் இன்று பல்லாயிரக்கணக்கான பயணிகளும் மற்றவர்களும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். விபத்துக்களும் பெருகி வருகின்றன.

களியக்காவிளை கன்னியாகுமரி சாலை முறையாக பராமரிப்பு இல்லாததாலும், சாலையின் தாங்கு சக்திக்கு மேலான அதிக பாரம் ஏற்றிவரும் டாரஸ் லாரி போன்ற பல கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதாலும், சாலை அதிகமாக பழுதடைந்துள்ளது. சாதாரண பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவைக்கூட பயணிக்க முடியாத அளவிற்கு வாகன ஓட்டிகளும் பயணிகளும் பெரும் துயருக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக விபத்துகளும் பெருமளவில் ஏற்பட்டு வருகின்றன. ஜனவரி 13-ம் தேதி திருவட்டாறு செங்கொடி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தன்னுடைய மனைவி பீனா உடன் பயணித்தபோது, குழித்துறை பகுதியில் வைத்து தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி மோதியது. லாரி சக்கரத்தில் தலை நசுங்கிய நிலையில், கணவர் கண் முன்பாகவே பீனா பலியாகி உள்ளார்.
அரசின் தவற்றால் ஏற்பட்ட இந்த விபத்தில் மரணமடைந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியின் இறப்பிற்கு, அரசே பொறுப்பேற்று அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் கன்னியாகுமரி மாவட்ட அமைச்சரும் மாவட்டத்தின் மலைகளை தகர்த்து ஜல்லியாகவும், மணலாகவும் கேரளாவிற்கு அனுப்புவதில் காட்டும் வேகத்தை நிறுத்திவிட்டு, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உயிரையும் மாவட்ட மக்களின் உடமையாக இருக்கும் மலை உள்ளிட்ட கனிம வளங்களையும் காக்க வேண்டும்.

கேரளா அங்கிருந்து மருத்துவக் கழிவுகளையும், கோழிக் கழிவுகளையும் அனுப்பி, கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பைத்தொட்டியாக மாற்றி வருகிறது. ஜனவரி 31-க்குள்ளாக சட்டத்திற்கு புறம்பாக இயற்கை வளங்களை அழிப்பதை தடுத்தல் மற்றும் டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த தவறினால், பிற மாநிலங்களுக்கு கனிம வளத்தை ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.
இந்த பேட்டியின்போது உடன் இருந்த கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ் கூறுகையில், “கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்காத தமிழக அரசை கண்டித்து, வரும் 31-ம் தேதி நாகர்கோவிலில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com