மல்லி, கண்ணாடி வளையல், பாசி மாலை… நாடாளுமன்ற

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஏ.கே.பி சின்ராஜ், ராஜ்வீர்டிலர், நரேந்திர குமார், தளரி ரெங்கையா, அப்துல்லா, கீதாபென்வா, ஷியாம் சிங் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மதுரைக்கு வருகை தந்து இரண்டு நாள்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளி குழந்தைகளுடன் கனிமொழி

நாடாளுமன்ற நிலைக்குழுவினர், ஒவ்வொரு இடத்தையும், பொருள்களையும் ஆச்சர்யமாகப் பார்த்து ரசித்தனர். இவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி போல, ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கி உபசரித்தார் கனிமொழி.

300-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் குடும்பங்கள் வசிக்கும், மண்பாண்டப் பொருள்களுக்கு புகழ்பெற்ற விளாச்சேரிக்கு சென்ற எம்.பி-க்கள் குழுவினர், சுற்றுச்சூழல் கெடாத வகையில் களி மண்ணில் பலவகையான பாத்திரங்கள் முதல், கலைநயமிக்க சுவாமி சிலைகள் வரை தயாரிப்பதை பார்வையிட்டனர்.

இப்பகுதியில் தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழில்கூடத்தை பார்வையிட்டு, அவர்களுடன் உரையாடினார்கள்.

அங்கிருந்த பெண் கைவினைஞர்கள், கனிமொழிக்கும், கீதா பென்வாவுக்கும் மல்லிகைப் பூச்சரத்தை தலையில் சூட்டினார்கள். அனைத்து எம்.பிகளுக்கும் கொம்பு ஊதி, மேளம் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

மண்பாண்ட கைவினைஞருடன்

அவர்கள் தயாரிக்கும் பொம்மைகள், மண்பாண்டங்கள், களிமண் சிலைகள், அகல்விளக்கு உள்ளிட்ட பாரம்பர்ய கைவினைப் பொருள்கள் தயாரிப்பதை பார்த்து வியந்தவர்கள் தயாரிக்கும் முறை, சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள், விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர்.

“கைவினைப் பொருள்கள், பொம்மை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்யவும், மழைக்காலங்களில் தேவையான இடங்களில் மண் எடுப்பதற்கும் முதல்வர் வழிகாட்டுதலுடன் வழிவகை செய்யப்படும்” என்று, அவர்களிடம் கனிமொழி உறுதியளித்தார்.

அடுத்ததாக, அரசு வேளாண்மைக் கல்லூரியில் விவசாயத் தொழில் முனைவோர் பாதுகாப்பு மையத்தை நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டார்கள். அங்கு விவசாயப் பொருள்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தும் முறையை கேட்டறிந்தனர்.

விவசாய தொழில் முனைவோருடன்

மறுநாள், தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாட்டை, சாந்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேரில் சென்று பார்த்ததோடு, குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்கள்.

அப்போது உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி ஷியாம் சிங் யாதவ், உணவை சாப்பிட்டு பார்க்க விரும்புவதாகக் கூற, அவருக்கு மட்டுமன்றி அனைத்து எம்.பி.க்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

காலை உணவை சாப்பிட்ட எம்.பி-க்கள் அதன் ருசியை புகழ்ந்துவிட்டு ‘தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் மிக சிறப்பானது’ என்றனர். அதைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றவர்கள் சாமி தரிசனம் முடித்தனர். எம்.பி கீதாபென்வா அங்கிருந்த கடையில் பலவகையான கண்ணாடி வளையல்களையும், பாசி மாலைகளையும் பார்த்து வியந்தார். மற்ற எம்.பிகளும் தங்கள் குடும்பத்தினருக்காக வளையல்களையும், மாலைகளையும் தேர்வு செய்தனர். அவர்கள் வாங்கியவற்றுக்கான தொகையை கனிமொழி கொடுத்தார்.

மீனாட்சியம்மன் கோயிலில் நிலைக்குழுவினர்

கொட்டும் மழையில் கீழடி சென்ற குழுவினர் அருங்காட்சியத்தை முழுமையாக பார்வையிட்டு பிரமித்தனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “கீழடி அருங்காட்சியகத்தை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுடன் பார்வையிட்டது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கீழடி அருங்காட்சியகம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. என்னுடன் வந்துள்ள குழுவினர் கீழடி மறக்க முடியாத அனுபவம் எனத் தெரிவித்தனர்” என்றார்.

கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சூது பவளம், உறை கிணறுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடு உள்ளிட்ட பொருள்களையும், 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்த மக்கள், எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற அரிய தகவல்களையும் எம்.பிக்கள் கேட்டு ஆச்சர்யப்பட்டனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு

உயர் தொழில்நுட்பம் மூலம், தமிழில் எழுதினால் கல்வெட்டில் உள்ள பிராமி அல்லது தமிழிய எழுத்துகளைப்போல திரையில் பிரதிபலிப்பதை பார்த்து வியந்த கனிமொழியும், புதுக்கோட்டை எம்.பி அப்துல்லாவும், தங்கள் பெயரை எழுதி அதன் பிராமி எழுத்து வடிவை மொபைலில் படம் எடுத்துக் கொண்டார்கள்.

இப்படி கலகலப்பாகவும் பரபரப்பாகவும் நடந்து முடிந்தது நாடாளுமன்ற நிலைக்குழுவின் மதுரை பயணம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *