தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தன்னுடைய மனைவியுடனான வங்கி ஜாயின்ட் அக்கவுன்ட்டிலிருந்து ரூ.99,999 காணாமல்போனதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் எழுத்துபூர்வமாக நேற்று புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், மலேசியாவிலிருக்கும் தன்னுடைய மனைவியின் எண்ணுக்கு யாரோ மூன்று முறை போன் செய்து இந்தியில் பேசியதாகவும், அதன் பிறகு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.99,999 ஒரே தடவையாக எடுக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய செல்போன் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையில், `நம்முடைய தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது?” என்று தயாநிதி மாறன் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்து தயாநிதி மாறன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “டிஜிட்டல் இந்தியாவில் நம்முடைய தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இல்லை. ஞாயிற்றுக்கிழமையன்று, IDFC FIRST Bank-Bill Desk வழியாக என்னுடைய ஆக்சிஸ் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.99,999 திருடப்பட்டது. இதற்கான OTP, என்னுடைய செல்போனிலிருந்து உருவாக்கப்படவுமில்லை அல்லது பெறப்படவுமில்லை. அதற்குப் பதிலாக, என் மனைவிக்கு போன் வந்தது. வங்கியைச் சேர்ந்தவர்கள்போல அவர்கள் நடித்தனர். அவர்களின் காட்சிப் படத்தில் cbic_india என இருந்தது. உடனடியாக என்னுடைய வங்கிக் கணக்கின் அனைத்து செயல்பாடுகளையும் தடுக்க ஆரம்பித்தேன். இருப்பினும், என்னுடைய தனிப்பட்ட தரவுகளை எப்படி எடுத்தார்கள் என்பதும், பாதுகாப்பு நெறிமுறைகளை எவ்வாறு இவ்வளவு எளிதாக மீறினார்கள் என்பதும் எனக்குப் புதிராகவே இருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com