“ஸ்டாலின் ஐயா… எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!"

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதன்படி தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஓ.பி.எஸ்

இக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனால் தற்போது வரை நடவடிக்கை இல்லை. எங்களுக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும் ஸ்டாலின் ஐயா… கொடநாடு கொலை, கொள்ளையை நடத்தியது யார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தவழ்ந்து தவழ்ந்து வந்து பதவியை பெற்றார் என்பதை பழனிசாமியே ஒப்புக்கொண்டுவிட்டார். அனைவரும் விமர்சிக்கின்றனர் என்பதால் தவழ்ந்து தவழ்ந்து… அதாவது படிப்படியாக கட்சியில் வளர்ந்து வந்தததாக தற்போது புதுவிளக்கம் கொடுக்கிறார்.

அதிமுக தொண்டர்களுக்கான கட்சி. எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்கு உருவாக்கப்பட்டதுதான் இந்த இயக்கம். அது தற்போது மிராசுதாரர்கள், ஜமீன்தாரர்கள் கைகளில் சிக்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியை சின்னாப்பின்னமாக்கிவிட்டார். எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நீங்களாகவே ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் தொண்டர்கள் தூக்கி எறிவார்கள்.

ஆதரவாளர்கள் அளித்த வேல், மாலை

அதிமுக தொடங்கப்பட்டபோது கட்சி எப்படி இயங்க வேண்டும் என சட்ட விதிமுறைகள் இயற்றப்பட்டது. அதில் ஒரே ஒரு சட்டத்தை மட்டும் ரத்து செய்யக் கூடாது, மாற்றியமைக்கக் கூடாது என எம்.ஜி.ஆர் கூறினார். பொதுச்செயலாளரை  தொண்டர்கள் தேர்வு செய்யும் சட்டம் எம்.ஜி.ஆர் கொடுத்த உரிமை. தற்போது இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியை தொண்டர்களுக்காக மீட்கவே இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். தற்போது 11 மாவட்டங்களுக்கு மேல் சென்றிருக்கிறேன். செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற பொதுக்குழுவில் மறைந்த ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றி, ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினோம். தற்போது அதை மாற்றி அமைத்து துரோகம் செய்துவிட்டார். அவரை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஓ.பி.எஸ்.,

எங்களுக்கு தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை. எங்களுடன் தேர்தலில் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. இனிவரும் காலங்களில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும்” என்றார்.

இக்கூட்டத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ-க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் மற்றும் மருது அழகுராஜ், புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *