வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அரசை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பங்கு முக்கியமானது. இந்த சூழலில்தான் ‘ ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார், நிதிஷ் குமார்’ என்ற தகவல்கள் சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இதற்கு ‘எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராகவும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் நிதிஷ் குமாரை நியமிக்க வேண்டும்’ என ஐக்கிய ஜனதாதளத்தினர் விடுத்த கோரிக்கையை, பிற தலைவர்கள் ஏற்காததுதான் காரணம் என சொல்லப்பட்டது.

இந்த சூழலில் சமீபத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் இணைந்து காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. மேலும் வரும் 1-ம் தேதி பீகாருக்குள் நுழையும் ராகுல் காந்தியின் நீதி யாத்திரையிலும் நிதிஷ் குமார் கலந்து கொள்ள மாட்டார் என அறிவித்தது ஐக்கிய ஜனதா தளம். இதனால் அவர் மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் இணைய போகிறார் தகவல் வெளியானது. ஏற்கெனவே மம்தா, கெஜ்ரிவால் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள சூழலில் நிதிஷின் செயல்பாடு எதிர்க்கட்சி தலைவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் நோக்கர்கள், ” ‘இந்தியா’ கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என நிதிஷ் குமார் கருதி வருகிறார். மேலும் அவருக்கு பீகாரில் லாலு பிரசத்துடனும் இணக்கமான சூழல் இல்லை. எனவே வழக்கமான தனது பாணியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக விரும்புகிறார். அதற்காக பா.ஜ.கவுடன் மீண்டும் கைகோர்க்க திட்டம் வகுத்து வந்தார். இந்த சூழலில்தான் கர்பூரி தாக்கூருக்கு ‘பாரத ரத்னா’ விருதை அறிவித்தது, மத்திய அரசு. இதையடுத்து பிரதமர் மோடியை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் ”குடும்ப உறுப்பினர்களை அரசியலில் ஊக்குவிப்பது இல்லை என்ற கர்பூரி தாக்கூர் கொள்கையை பின்பற்றுகிறோம்’ என்று சொல்லியிருந்தார். இது மறைமுகமாக லாலு குடும்பத்தை நிதிஷ் விமர்சனம் செய்து இருந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, “காற்று திசைமாறுவது போல் கொள்கையை மாற்றிக்கொள்பவர்” என்று பெயர் குறிப்பிடாமல் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது நிதிஷ் விரைவில் பா.ஜ.கவுடன் கைகோர்ப்பார்’ என்றனர்.
இதற்கிடையில் பீகாருக்கு சென்றிருக்கும் அமித் ஷா, சரண் மாவட்டத்தில் நடந்த ஜெயபிரகாஷ் நாராயணின் 120வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மைக் பிடித்தவர், ‘பீகார் மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து இருக்கிறது’ என நீண்ட பட்டியலை அடிக்கினார். தொடர்ந்து பேசியவர், “ஜெயப்பிரகாஷ் நாராயணணின் தத்துவத்தின்படி பா.ஜ.க செயல்படுகிறது. பீகாரில் ‘மகாகத்பந்தன்’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கிறார்கள்.” என்றவர்,

‘ஐந்து முறை அணி மாறிய முதல்வர்’ என நிதீஷ் குமாரை கடுமையாக சாடியிருந்தார். இதுவரை எப்படியெல்லாம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார் என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், “பீகாரில் பா.ஜ.க – ஐக்கிய ஜனதா தளம் இடையேயான உறவு தொடர்ந்து 17 ஆண்டுகளாக இருந்தது. 2013-ல் பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவதாக அறிவித்தது, பா.ஜ.க. அதற்கு நிதிஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மோடியை நிறுத்த கூடாது என வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார். ஆனால் பா.ஜ.க தலைமை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து தனது நீண்ட கால உறவை முறித்துக்கொண்டார், நிதிஷ். ஆனால் 2014-ல் நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு படு தோல்வி ஏற்பட்டது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார், நிதிஷ். பிறகு நடத்த சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து முதல்வர் நாற்காலிக்கு வந்தார்.

ஆனால் சில காலத்திற்கே இந்த உறவு நீடித்தது. அதாவது லாலு பிரசாத் யாதவ்வுக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றது நிதிஷுக்கு பிடிக்கவில்லை. பா.ஜ.க அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி மறுசீரமைப்புக்கு ஆதரவாக நிதிஷ் பேசியது கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் நிதிஷ், லாலு இடையிலான மோதல் கூர்மையடைந்தது. அந்தநேரத்தில் லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு செய்தது, சிபிஐ. இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான தனது உறவை முறித்துக்கொண்டு வெளியேறினார் நிதிஷ். பின்னர் பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதலைவரானார்.
அதனை தொடர்ந்து 2020-ல் நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜ.கவுடனேயே இணைத்தே சந்தித்தார். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது, பா.ஜ.க. இதனால் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார், நிதிஷ். இதில் கடுப்பானவர் பா.ஜ.கவுடனான தனது உறவை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து மீண்டும் முதல்வரானார். இந்த சூழலில்தான் 2024 தேர்தலில் மோடியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைத்தார். தற்போது மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு நிதிஷ் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இருக்கிறது’ என சொல்லி வருகிறது. இது உண்மை என்ன என்பது விரைவில் தெரிந்து விடும்” என்கிறார்கள்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com