புதுச்சேரி : காரைக்கால் ரயில் நிலையம் ரூ. 5.37 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.
காரைக்காலில் இருந்து திருநள்ளார் வழியாக பேரளம் இடையில் கடந்த 1951ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை நடந்து வந்தது. இதில் போதிய வருவாய் இல்லை எனக் கூறி கடந்த 1984ம் ஆண்டு இத்தடத்தில் ரயில்சேவை நிறுத்தப்பட்டது. ரயில் நிலையங்கள், ரயில்பாதைகள் இடித்து அகற்றப்பட்டது.
பல்வேறு கட்சியினரின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு காரைக்கால் – நாகூர் இடையிலான அகல ரயில்பாதை பணி துவங்கியது. கட்டுமான பணி முடிந்து 2011ம் ஆண்டு காரைக்காலில் புதிதாக ரயில் நிலையமும், காரைக்கால் – நாகூர் இடையிலான புதிய அகல ரயில்பாதை திறந்து வைத்து ரயில் சேவை துவங்கியது.
தற்போது காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னை, எர்ணாகுளத்திற்கும், திங்கள் கிழமை மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதுதவிர தினசரி பெங்களூர், திருச்சி, தஞ்சாவூர், வேளாங்கண்ணிக்கு பயணிகள் ரயில்கள் இயங்கி வருகிறது.
ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட காரைக்கால் – பேரளம் இடையில் புதிய அகல பாதை அமைக்கும் பணி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு ஜூன் மாதம் பணிகள் முடிந்து ரயில் சேவை துவங்கப்பட உள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள் ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பில் உலக தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. இப்பணிகளை கடந்த மாதம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் ரயில் நிலையம் ரூ.5.37 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி துவங்கி உள்ளது.
முதற்கட்டமாக பயணிகள் நடந்து வரும் பாதை மற்றும் பார்க்கிங் வசதியுடன் கூடிய அழகிய முகப்பு தோற்றம், பயணிகள் காத்திருப்பு கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள பாதை, ரயில்கள் புறப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் அறிவிக்கும் எல்.இ.டி. தகவல் பலகை, மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், பிளாட்பார இருக்கைகள், குடிநீர் குழாய்கள், பிளாட்பார மேற்கூரைகள், மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் வகையிலான நடைபாதை, அனைத்து மின் விளக்குகளும் எல்.இ.டி.யாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் அடுத்தாண்டு மத்தியில் முழுமையாக நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
புதுச்சேரி : காரைக்கால் ரயில் நிலையம் ரூ. 5.37 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.காரைக்காலில் இருந்து திருநள்ளார் வழியாக பேரளம் இடையில் கடந்த 1951ம் ஆண்டு மீட்டர்கேஜ்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement