மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் குழாய்கள் பதிப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய ரோடுகள் அமைக்கும் பணிகளால் தினமும் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிப்பு பணிகளுக்காக எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாத நிலையில் காட்சியளிக்கின்றன. மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட 28 மாநகராட்சி வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக ரோடுகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதுதவிர ரூ.450 கோடியில் புதிய ரோடுகள், ரோடு பராமரிப்பு பணிகளும் துவங்கியுள்ளன.
மழைக்காலம் துவங்கிய நிலையில் நகரில் 90 சதவீதம் ரோடுகள் படுமோசமாக உள்ளன. தாழ்வான, ரோடுகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. தீபாவளி நெங்குவதையொட்டி மக்கள் புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க அதிக எண்ணிக்கையில் கடைகளுக்கு வரத்துவங்கியுள்ளனர். தற்போது துவங்கியுள்ள மழைக் காலத்தில் அவர்களுக்கு போக்குவரத்து பெரும் சவாலாக உள்ளது.
மக்கள் கூறியதாவது: மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் ரோடுகள் அமைக்க ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்டு மாதக்கணக்கில் பணிகள் நடக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றன. ஒப்பந்ததாரர்களும் கண்டுகொள்வதில்லை. வடிகால், மழை நீர் கால்வாய்களை மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக துார்வாராததால் சிறு மழை பெய்தாலும் ரோடுகளில் ஆறு போல் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை முடக்கி விடுகிறது. நகரில் ரூ.991 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்தாலும் பணிகள் முடிந்த மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி உள்ள ரோடுகளில் தான் மழைநீர் தேங்குகிறது. இதனுடன் கழிவு நீரும் பொங்கி வருகிறது.
பழங்காநத்தம், கோரிப்பாளையம், தமிழ்ச் சங்கம் ரோடு, சிம்மக்கல், பெரியார், கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்டுகள், டவுன் ஹால் ரோடு, புதுார், ஆத்திக்குளம், ஜவஹர்புரம், மேலமடை, கோச்சடை என முக்கிய ரோடுகள் மழை நீரால் மூழ்கி பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் டூவீலர்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக 38, 39, 40 வது வார்டுகளில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழை நீர் தேங்கி ஆபத்தான சூழல் நிலவுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் குழாய்கள் பதிப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய ரோடுகள் அமைக்கும் பணிகளால் தினமும் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement