மதுரை, ; மதுரையில் முன்னறிவிப்பின்றி இன்று முதல் (நவ.,1) ஆவின் பசும்பால் (கவ் மில்க்-சி.எம்.) நுாதனமாக லிட்டருக்கு ரூ.6 விலை உயர்த்தப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் அதிகம் விரும்பும் பச்சை பால் பாக்கெட் ‘ஸ்டாண்டர்டு மில்க்’ (எஸ்.எம்.,) நவ.,15 முதல் நிறுத்தப்படுகிறது. இந்த மாற்றத்தால் பால் விற்பனை பாதிக்கும் என முகவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஆவின் பால் விற்பனை மூலம் லாபத்தை அதிகரிக்கும் வகையில் சில பால் பாக்கெட்டுகளை நிறுத்தியும், மறைமுகமாக சில பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தியும் ஆவின் நடவடிக்கை எடுத்துள்ளது. கோல்டு, டீ மேட் பால் வகையில் அரை சதவீதம் கொழுப்பு சத்தை குறைத்து, விலையில் ஏதும் மாற்றம் இல்லை எனக்கூறி மறைமுகமாக விலையை உயர்த்தி நுகர்வோர்களின் வயிற்றில் அடித்துள்ளது ஆவின் நிர்வாகம். எஸ்.எம்., பால் பாக்கெட் வாங்கும் மாத அட்டைதாரர்களுக்கு நவ.,15 வரை வழக்கம் போல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகவர்கள் கூறியதாவது: பால், மோர், தயிர் என மொத்தம் 10 வகை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அரை லிட்டர் பச்சை பால் பாக்கெட்டை நிறுத்துவதால் நுகர்வோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கு பதில் அரை லிட்டர் ரூ.21.50க்கு விற்ற பசும்பால் (சி.எம்.) தற்போது ரூ.22 ஆக நிர்ணயிக்கப்பட்டு 50 காசு உயர்த்தியுள்ளது.
இதுவரை 250 மி.லி.,க்கு ரூ.11 விலையில் ஒரு லிட்டர் சி.எம்.,பால் ரூ.44க்கு விற்றது. விலை மாற்றத்திற்குப் பின்பு, 200 மி.லி., பால் ரூ.10 என ஒரு ரூபாய் குறைக்கப்பட்டாலும், ஒருலிட்டர் வாங்கும்போது அதன் விலை ரூ.50 ஆகிவிடும். இதனால் ஒருலிட்டருக்கு ரூ.6 கூடுதலாக வாடிக்கையாளர் வழங்க வேண்டும்.
இதுபோல் 5 மற்றும் 9 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட அரை லிட்டர் ‘கோல்டு’ வகை பாக்கெட் ரூ.28 க்கு விற்றது. தற்போது அதே அரை லிட்டர் ரூ.28க்கு விற்கப்படுகிறது. ஆனால் 0.5 சதவீதம் கொழுப்பு சத்தை ஆவின் நுாதனமாக குறைத்து விட்டது.
இதே நுாதன விளையாட்டை அரை லிட்டர் ‘டீ மேட்’ பால் வகையிலும் ஆவின் செய்துள்ளது. நிறை கொழுப்புள்ள புல் கிரீம் மில்க் பாக்கெட் வகைகளை நிறுத்திவிட்டு, அரை லிட்டர் ‘டீ மேட்’ பால் பாக்கெட்டை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. அளவு குறைப்பு யுக்தியை தயிர், மோர் பாக்கெட்டுகளிலும் ஆவின் நுாதனமாக கையாண்டுள்ளது என்றனர்.
மக்கள் கூறுகையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புதிய பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறேன் என்ற பெயரில் மறைமுகமாக பால் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றனர்.
நஷ்டத்தை சமாளிக்க மக்கள் தலையில் கட்டுவதா
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இதனால் பல ஆவின் ஒன்றியங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. அதை சமாளிப்பதற்காக தற்போது புதிய பால் பாக்கெட்டுகள் அறிமுகம் என்ற பெயரில் ரூ.6 வரை நுாதனமாக விலையை ஏற்றியும், பால் கொழுப்பு சத்தை குறைத்தும் தமிழக அளவில் ஆவின் நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்த பால் விலை உயர்வு சுமையையும் மக்கள் தலையில் அரசு ஏற்றியுள்ளது என பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com
