கடலுார்: கடலுார் சில்வர் பீச் சாலையில், நடைபாதை திட்டத்தை செயல்படுத்த ரூ. 5 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைப்படி, உடற்பயிற்சி செய்வது நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கத்தை 28 சதவீதமும், இதயநோய் தாக்கத்தை 30 சதவீதம் குறைக்கிறது என, அறியப்படுகிறது.
நாள்பட்ட உடல் பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் நடைபயிற்சி உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்’ செயல்படுத்தப்படும் என, சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கடலுாரில் நடைபாதை திட்டம் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது.
அதற்காக, கடலுார் பாரதி சாலையில் இருந்து சில்வர் பீச் வரை உள்ள விஸ்தாரமான சாலை நடைபாதைக்கு ஏற்ற இடமாக கண்டறியப்பட் டுள்ளது.
மேலும், திட்டத்தை செயல்படுத்த மாவட்ட சுகாதார நடைபயிற்சி குழு அமைக்கப்பட்டு, இதுவரை இரண்டு ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தி, பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பீச் ரோட்டில் அமைய உள்ள நடைபாதை சாலையில் குடிநீர் வசதி அமைத்தல், இளைப் பாற இருக்கைகள், மரங்கள் நடுதல், காண்போர் மனம் கவரும் வகையில் வண்ண பூ செடிகள் நடுதல், மைல் கல் நடுதல், நடைபயிற்சி குறித்த விழிப்புணர்வு பதாகைகள், அழகான மின் விளக்குகள் போடுதல், தேவனாம்பட்டிணம் சில்வர் பீச்சில் சிறிய அளவிலான ஆடிட்டோரியம்அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படவுள்ளன.
கடலுார் கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுரையின்படி, இப்பணிகளை கடலுார் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, மாநகராட்சி, தோட்டக்கலை துறை மற்றும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்த உள்ள ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட் டத்தை வரும் நவ., 4ம் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
அதையொட்டி நேற்று பீச் ரோடு, மைதானம் ஆகிய இடங்கள் ஜே.சி.பி., உதவியால் மேடு பள்ளங்கள் சமப்படுத்தப் பட்டது. அவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் கமிஷ னர் காந்திராஜ், நகர்நல அலுவலர் எழில் மதனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகரை அழகுபடுத்தவும் திட்டம்
கடலுார் சில்வர் பீச் மற்றும் கடலுார் மாநகரை அழகுபடுத்தும் திட்டத்திற்காக 52 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்ற தமிழக அரசுக்கு மாநகராட்சி சார்பில் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என மேயர் சுந்தரி ராஜா கூறினார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் களையிழந்து கிடந்த மாநகரத்தில் குடிநீர், சாலை அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில்வர் பீச் மற்றும் மாநகர் அழகுபடுத்தும் திட்டத்திற்காக 52 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்றார். அதன் ஒரு பகுதியாக, ரூ.5 கோடியில் நடைபாதை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com