கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டங்களின் மூலம் மூன்று ஆண்டுகளில் 19,236 பயனாளிகள் ரூ.25.89 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆண்டு விழா கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், ஏழை எளிய மக்களும் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு, சாலை மேம்பாடு பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் கவன குறைவால் ஏற்படும் விபத்துகளை முறையாக பதிவு செய்து, அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் எவ்வித தாமதமும் இன்றி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதனையொட்டி, அறுவை சிகிச்சைக்காக பிரத்யேக உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்திதர சுகாதார துறைக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
மாவட்டத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கடந்த 2021-23 வரை மூன்று ஆண்டுகளில் 19,236 பயனாளிகள் 25 கோடியே 89 லட்சத்து 290 ரூபாய் மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
மேலும், காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள், விண்ணப்பத்தவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரி டீன் உஷா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராமு, தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட திட்ட அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com