மதுரை : பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான சிறுமலை பகுதியில் கட்டடம், கல்குவாரி அமைப்பது குறித்து அரசிடமிருந்து தகவல் வரவில்லை. அப்படி வந்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மறுப்பு தெரிவிப்போம்’ என மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா தெரிவித்தார்.
வாடிப்பட்டியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சிறுமலை தெத்துார் பகுதியில் மத்திய சிறை அமைக்கக்கூடாதென மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தெத்துார், கொழிஞ்சிபட்டி மக்கள் சார்பிலும் பாரதிய கிசான் சங்கம் சார்பில் தாசில்தார் மூர்த்தியிடம் புகார் மனு அளித்ததாக சங்க மாநிலத்துணைத் தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட துணைத்தலைவர் திரவியம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஆக்கிரமிப்பு என்றால் நோட்டீஸ் கொடுத்து அதன்பின் அகற்ற வேண்டும். தெத்துாரில் போலீசாரைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் அத்துமீறி முன்னறிவிப்பின்றி விவசாய நிலத்தில் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. 2006 தி.மு.க., ஆட்சியில் இங்குள்ளவர்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் தந்து கருணாநிதி பட்டா வழங்கினார். மீதி பேருக்கு வழங்குவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பட்டா கிடைக்கவில்லை. எனவே புறம்போக்கு நிலம் என்று சொல்ல முடியாது. மீதியுள்ளோருக்கு பட்டா வழங்க வேண்டும். இங்கு மத்திய சிறை அமைக்கக்கூடாது.
மேலும் அலங்காநல்லுார் பொந்துகம்பட்டி கல்குவாரியில் மண் தீரும் நிலையில் உள்ளதால் சிறுமலையை ஒட்டியுள்ள இரண்டு குன்றுகளை கல்குவாரியாக்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே நிலத்தை காலி செய்யச் சொல்கின்றனர். இங்கு கல்குவாரியோ, சிறையோ வரக்கூடாது என்றனர்.
தெத்துார் நிலப்பகுதி சிறுமலை அடிவாரத்தை ஒட்டியுள்ளது என்பதால் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா இதுகுறித்து கூறியதாவது: அரசிடமிருந்து சிறை அமைக்கவோ, கல்குவாரி அமைக்கவோ அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. சிறுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இங்கு கட்டடம், குவாரி அமைந்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் எங்களது மறுப்பை தெரிவிப்போம், என்றார்.
மதுரை : பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான சிறுமலை பகுதியில் கட்டடம், கல்குவாரி அமைப்பது குறித்து அரசிடமிருந்து தகவல் வரவில்லை. அப்படி வந்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement