கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கடந்த இரு ஆண்டுகளாக கொடி நாள் வசூலில் சாதனை படைத்தஅரசு அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து பதக்கம் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் துார் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை, வேளாண் உழவர் நலத்துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட 549 கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022-23ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 நபர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகில் தட்டச்சர்களாக பணி நியமன ஆணையும், 2020-21 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு காலிப்பணியிட மதிப்பீட்டின்படி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 17 பேர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் தட்டச்சர்களாக பணி நியமன ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
தொடர்ந்து, நீரில் மூழ்கி உயிரிழந்த சின்னசேலம் வட்டம், கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்,15; சங்கராபுரம் வட்டம், உலகுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா,7; ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவி தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் செவித்திறன் குறையுடையோருக்கு காதொலி கருவி 4 நபர்களுக்கு வழங்கினார்.
பின்னர், 2018 ஆண்டில் அதிகமாக கொடி நாள் வசூல் செய்தமைக்காக கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., ஜெயபாஸ்கரன், 2020ல் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமாரி ஆகியோர்களுக்கு கலெக்டர் வெள்ளி பதக்கம் வழங்கி பாராட்டினார்.
சின்னசேலம் விஜயபுரத்தில், வழித்தெரியாமல் தவித்த ஒன்றரை வயது குழந்தையை மீட்டு, 5 மணி நேரமாக பெற்றோர் வரும் வரை தனது கட்டுப்பாட்டில் வைத்து அந்த குழந்தைக்கு தேவையான உணவு, ஆடை உள்ளிட்டவைகளை அளித்து வந்த கோகுல் என்ற சிறுவனை பாராட்டி ரூ.5,000 ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.
அத்துடன் தியாகதுருகம் கோவிந்தராஜ் மனைவி சுகுமாரி அளித்த பரிசீலித்த கலெக்டர் ஷ்ரவன்குமார், மாவட்ட சமூக நலத்துறை சார்பாக புதிய தையல் இயந்திரத்தினை உடனடியாக வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com