புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு மாவட்டமான காரைக்கால், டெல்டா பகுதியான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் மத்தியில் அமைந்துள்ளது. காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள காரைக்காலில், காவிரி ஆற்று நீரை நம்பியே பெரும்பாலும் விவசாயம் நடந்து வருகிறது. காரைக்காலில் இருபோக சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குறுவை சாகுபடி நடப்பது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் போர்வெல் பாசனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் மாதத்தில் சம்பா சாகுபடி சீசன் துவங்கும்.
இந்த சீசனில் காரைக்கால் முழுவதும் பரவலாக 4,500ல் இருந்து 5,000 ஹெக்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடி, முழுவதும் ஆற்று நீர் பாசனத்தையே நம்பி உள்ளது. அதாவது, காவிரி நீரே, சம்பா சாகுபடிக்கு கை கொடுப்பது வழக்கம்.
கடந்த ஜூலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும், கடைக்கோடியில் உள்ள காரைக்காலில் கடந்த மாதம் சில நாட்களுக்கு மட்டுமே பெயரளவிற்கு தண்ணீர் எட்டி பார்த்தது.
பின், நீர் வரத்து நின்று விட்டது.
காவிரி தண்ணீரை திறந்து விடுவதற்கு கர்நாடகா அரசு அடம் பிடித்து வருவதால், காரைக்காலில் ஆறுகள், பாசன வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன.
இதனால், வயலை உழுது, நாற்று விட்டு, நடவு நடும் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆறுகளில் தண்ணீர் வரத்து இல்லாததால், காரைக்கால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, 3,500 ஹெக்டேர் அளவிற்கு நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். 1,000 ஹெக்டேர் நிலங்கள் தரிசாக போடப்பட்டுள்ளன.
நாற்று விட்டு நடவு நடும் முறையிலான சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் களை எடுக்க அதிக செலவு ஏற்படுவதுடன், மகசூலும் குறையும்.
இருந்தபோதும், தண்ணீர் இல்லாததால் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை சீசன் இன்னும் துவங்கவில்லை.
காவிரி நீர் வருவதற்கும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், இயற்கைக்கு மாறாக கடுமையான வெயிலும் வாட்டி வதைத்து வருவதால், வெப்பம் காரணமாக, நேரடி விதைப்பு செய்துள்ள நெல்கள் 2, 3ஆக உடைந்து விடும் அபாயம் எழுந்துள்ளது.
முளை விட்டுள்ள பயிர்களும் தண்ணீர் இல்லததால் கருகி வருகின்றன.
இதனால், விவசாயிகள் தினமும் வயலுக்கு சென்று விதை நெல்லை தோண்டி எடுத்து, உடைந்து விட்டதா என கவலையுடன் பார்த்து வருகின்றனர்.
மழை வருமா, நேரடி நெல் விதைப்பு சாகுபடி தப்பிக்குமா என வானத்தை பார்த்தவாறு கவலையுடன் உட்கார்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்றுத் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com