கோவை நகருக்குள் பல்வேறு ரோடுகளும் அகலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில ரோடுகளில் ‘டிவைடர்’ வைக்காமல் இருப்பதால், வாகனங்கள் அசுர வேகத்தில் வருவது, விபத்துக்கு வழிவகுப்பதாகவுள்ளது.
கோவை நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலும், மாநில மற்றும் மாநகராட்சி ரோடுகள் பெரும்பாலும் படுமோசமான நிலையில் இருந்தன. அதிலும் மாநில நெடுஞ்சாலைக்குச் சொந்தமான ரோடுகள் தான், பயன்படுத்தவே லாயக்கற்ற நிலையில் அவலமாக இருந்தன. மக்களின் அன்றாட அவதி அதிகமானதால், மாநில நெடுஞ்சாலைத்துறை மீது, கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனால், இத்துறைக்குச் சொந்தமான 16 ரோடுகளைச் சீரமைக்க, ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இவற்றில், சுந்தராபுரம் – மதுக்கரை, குறிச்சி – போத்தனுார், கவுண்டம்பாளையம் – வடவள்ளி, சிறுவாணி ரோட்டில் கருப்பராயன் கோவில் – செல்வபுரம் ஜி.எச்., தடாகம் ரோட்டில் ஜி.சி.டி., – ஆனைகட்டி வழியில் 5.25 கி.மீ.,ரோடு, கவுலி பிரவுன் ரோடு ஆகியவை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
இவற்றைத் தவிர்த்து, காளப்பட்டி நேரு நகர்-கருப்பராயன்பாளையம் வரையிலான 2.5 கி.மீ., கணபதி மணியக்காரன்பாளையம்-கே.என்.ஜி.,புதுார் ரோட்டில், 2.6 கி.மீ., ரோடு, கவுண்டம்பாளையம் டி.வி.எஸ்.,நகர் ரோடு 2.6 கி.மீ., வீரகேரளம் ரோட்டில், தடாகம் ரோடு பிரிவு-மூங்கத்துார் வரை 3 கி.மீ., ரோடு, மதுக்கரை ரோடு-ஈச்சனாரி உள்ளிட்ட பல ரோடுகளும், ஏழு மீட்டரிலிருந்து 10 மீட்டராக அகலப்படுத்தப்படுகின்றன.
ரோடும், கோடும்…
நான்கு வழிச்சாலையாக்கப்படும் ரோடுகளில், ‘சென்டர் மீடியன்’ அமைக்கவும் சேர்த்தே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அதற்கும் குறைவாக இரு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் ரோடுகளில், இரு வழிகளையும் பிரித்துக் காட்டுவதற்கு கோடுகள் மட்டுமே போடப்படுகிறது. சாதாரண ‘டிவைடர்’ வைப்பதற்கு விதிமுறையுமில்லை; நிதியுமில்லை என்று கைவிரிக்கின்றனர் அதிகாரிகள்.
அகலப்படுத்தப்பட்ட ரோடுகளில், ஒரு சில சந்திப்புகளில், நான்கு வழிச்சாலையை விட, ரோடுகள் அகலமாக இருக்கின்றன.
அத்தகைய இடங்களில், வாகனங்கள் அனைத்துமே அசுர வேகத்தில் வருகின்றன. குறிப்பாக, அதி நவீன ‘பைக்’குகளில் வலம் வரும் இளைஞர்கள், கட்டுப்பாடற்ற வேகத்தில் ‘பறப்பதால்’ மற்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பதற வேண்டியுள்ளது; நிறைய விபத்துகளும் நடக்கின்றன.
ஏற்கனவே அகலப்படுத்தப்பட்ட பல ரோடுகளிலும், ‘டிவைடர்’கள் வைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் ஏற்கப்படவே இல்லை. மாநில நெடுஞ்சாலைத்துறையும், மாநகர காவல்துறையும் இணைந்து, சிறிய அளவிலான ‘டிவைடர்’களையாவது வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்.
அசுர வேக ஆபத்து
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் மருதமலை ரோட்டில், பாரதியார் பல்கலையிலிருந்து மலையடிவாரம் வரையிலான அகலப்படுத்தப்பட்ட ரோட்டில், ‘டிவைடர்’ வைக்கப்படாததால் எக்கச்சக்கமான விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.ஓணாப்பாளையம் ரோடு, கவுலிபிரவுன் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் ரோடு உள்ளிட்ட 10 மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட ரோடுகள் அனைத்திலுமே, இந்த அசுர வேக ஆபத்து அதிகரித்துள்ளது. நடுவில் வரையப்பட்டுள்ள கோட்டை யாரும் மதிப்பதில்லை என்பதால், எதிர்திசையில் ஏறி வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதற்கு ‘டிவைடர்’ வைப்பது ஒன்றே ஒரே தீர்வாகும்.
-நமது நிருபர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com
