விழுப்புரம்- விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் திருட்டுச் சம்பவங்களை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டறிந்து, கைது செய்வதற்கு வசதியாகவும், நகர்ப்புற வணிக வீதிகளிலும், கிராமப்புறங்களிலும் கட்டாயம் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என, காவல்துறை தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் உட்கோட்ட பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து, அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், முக்கிய சந்திப்பு இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க உதவ வேண்டும் என்று, விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் ஆலோசனை வழங்கி, அறிவுறுத்தி வருகிறார். இதன்படி, வளவனுார் பகுதியில் ஒரு சில கிராமங்களில் ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமரா அமைக்க முன் வந்தனர்.
இந்த வகையில், விழுப்புரம் அருகே கண்டமானடி ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், தங்களது சொந்த நிதியில் கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளனர்.
கண்டமானடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விழுப்புரம் நகரப்புறத்தையொட்டியுள்ள அந்த கிராம பகுதியில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, அரசு மேல்நிலைப்பள்ளி, தபால் நிலையம், கால்நடை மருத்துவமனை போன்ற அரசு அலுவலகங்கள் இருப்பதால் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், ரூ.5 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராவை அமைத்துள்ளனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் 2 கேமராக்களும், காமன் கோவில் வீதி ஜலதர மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் 2 கேமராக்கள், அரியலுார் ஊராட்சிக்கு செல்லும் சாலை சந்திப்பில் ஒரு கேமராவும், அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பு பகுதியில் 2 கேமராக்கள் என, முதல் கட்டமாக 10 கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.
இந்த கேமரா பதிவுகள் அனைத்தும் தானியங்கி முறையில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி அலுவலக செல்போன் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலும் கேமரா பதிவுகள் பதிவாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் அந்த கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார், ஊராட்சித் தலைவர் ஏழுமலை, துணைத் தலைவர் ராஜா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த கேமரா அமைத்ததற்கு வரவேற்றுள்ள விழுப்புரம் போலீசார், இதேபோல் தாலுகா காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமரா அமைக்க முன்வர வேண்டும்.
இதன் மூலம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திருட்டு, மோதல் சம்பவங்களை கண்காணித்து தடுக்கவும், அதே நேரத்தில் கண்காணிப்பு கேமரா இருப்பதால் திருட்டுகள் நடைபெறாமல் தடுக்கப்படும் என்பதால், அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர், இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com